இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து மீண்டு வரும் வேளையில் நாட்டின் மத்திய அரசு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்-ஐ தாக்கல் செய்ய உள்ளது.
2020ல் வேலைவாய்ப்புப் பாதிப்பு, சம்பள குறைப்பு, வருமான சரிவு, வர்த்தக பாதிப்பு என இந்திய மக்களின் நிதிநிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இதேவேளையில் மத்திய அரசு திட்டமிட்டு பல்வேறு வளர்ச்சி திட்டத்திற்கு அதிகளவிலான நிதி தேவைப்படுகிறது.
இந்த இரண்டு முக்கியப் பிரச்சனைக்கும் தீர்வு காணும் வகையில் தொழிற்துறை அமைப்பான அசோசாம் மத்திய நிதியமைச்சகத்திற்கு ஒரு முக்கியமான பரிந்துரையைத் தெரிவித்துள்ளது.
தனிநபர் வருமான வரி
தற்போதைய மத்திய அரசின் நிதி நிலையில் தனிநபர் வருமான வரியைக் கண்டிப்பாகக் குறைக்க முடியாது. இதற்கு முக்கியக் காரணம் 2020ல் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் மத்திய அரசின் வரி வருமானம் பெரிய அளவில் குறைந்தது. இந்நிலையில் தற்போது தனிநபர் வருமான வரி குறைப்பது என்பது சாத்தியமற்றது.
ரூ.5,00,000 வருமான வரிச் சலுகை
இந்தச் சூழ்நிலையில் மக்களுக்குச் சலுகை அளிக்கும் விதமாக, மத்திய அரசும் லாபம் அளிக்கும் விதமாக அரசு சேமிப்புத் திட்டம், ஓய்வூதிய திட்டம், லைப் இன்சூரன்ஸ், வீட்டுக் கடன் (அசல் மற்றும் வட்டி), மருத்து காப்பீடு ஆகியவற்றில் செய்யப்படும் முதலீட்டுக்கு 5,00,000 ரூபாய் வருமான வரிச் சலுகை அளிக்கப் பரிந்துரை செய்துள்ளது அசோசாம்.
அரசு சேமிப்புத் திட்டம்
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள குறிப்பிட்ட அரசு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் 5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு கிடைக்கும் வருமான வரிச் சலுகை மக்களுக்குப் பெரும் சலுகையாக இருக்கும். இதேபோல் இதில் பெரும் பகுதி தொகை அரசு அமைப்புகளுக்குச் செல்லும் காரணத்தால் மத்திய அரசுக்கு லாபம்.
80சி பிரிவில் தளர்வு
இதேபோல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் வகையில், 80சி பிரிவின் கீழ் தற்போது இருக்கும் 1,50,000 ரூபாய் அளவிலான வருமான வரிச் சலுகை அளவீட்டை 3,00,000 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தவும் மத்திய நிதியமைச்சகத்திற்குத் தொழிற்துறை அமைப்பான அசோசாம் தெரிவித்துள்ளது.