ஜெய்ப்பூர்: கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழலில் பல மாற்றங்கள் வந்துள்ளன.
குறிப்பாக நிறுவனங்கள் பலவும் வீட்டில் இருந்து பணி புரியும் ஆப்சனை ஊழியர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. பல நிறுவனங்களும் இந்த ஆப்சனை நிரந்தரமாக அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன.
குறிப்பாக வீட்டில் இருந்து பணிபுரியும் ஆப்சன் என்பது பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவும் வந்தது. சொல்லப்போனால் நிறுவனங்களின் இந்த திட்டத்தினால் பெண்களின் பங்களிப்பு என்பது கணிசமாக அதிகரித்தது எனலாம்.
பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அம்மாநில அரசு ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது. அதில் ராஜஸ்தான் அரசு துறை மற்றும் தனியார் துறையில் பெண்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் ஒரு திட்டத்தினை தொடங்கியுள்ளது.
தனியாக தளம்
இது குறித்தான அறிவிப்பினை முதலமைச்சர் அசோக் கெலாட் கடந்த பட்ஜெட்டின் போதே வெளியிட்டார். இதற்காக https://mahilawfh.rajasthan.gov.in/ என்ற போர்ட்டலையும் ராஜஸ்தான் அரசு வெளியிட்டது. பெண்கள் ஜனதார் கார்டு மூலம் இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
நிறுவனங்களுக்கு மானியம்
இந்த வொர்க் ஃபரம் ஹோம் ஆப்சனை பெண்களுக்கு கொடுக்கும் நிறுவனங்களுக்கு, மானியத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனங்களால் தீர்மானிக்கப்படும் சம்பளத்தில் 20% மாநில அரசு நிதி உதவியாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ராஜஸ்தான் அரசு பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யும் எனவும், இதன் மூலம் ஆறு மாதங்களில் சுமார் 20,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
எத்தனை பேர் பதிவு
இதுவரையில் இந்த போர்ட்டலில் 150 பெண்களும், 9 நிறுவனங்களும் பதிவு செய்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உண்மையில் இதுபோன்ற அறிவிப்புகள் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்க உதவும். பெண்கள் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க இது உதவும். மொத்தத்தில் பெண்களுக்கான சிறந்த வாய்ப்பினை இது உருவாக்கி தரும் எனலாம்.
இதுபோன்று தமிழகத்திலும் ஒரு அறிவிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? உங்கள் கருத்து என்ன பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications