இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா சாம்ராஜ்ஜியத்தின் 100க்கும் அதிகமான நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை டாடா டிரஸ்ட் என்ற அமைப்பு வைத்துள்ளது.
இந்த டாடா டிரஸ்ட் தான் டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, இந்த அமைப்பிற்குத் தற்போது தலைவராக இருப்பவர் இந்திய வர்த்தகத் துறையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற ரத்தன் டாடா.
இந்த நிலையில் ரத்தன் டாடா தற்போது புதிதாகவும், தனது சொந்த முதலீட்டில், சொத்துக்கள் அடிப்படையிலான தனிப்பட்ட டிரஸ்ட் அமைப்பை உருவாக்கியுள்ளார்.
டாடா டிரஸ்ட்
டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக இருக்கும் ரத்தன் டாடா நீண்ட காலமாகத் தனது சொந்த பணத்தில் பல துறையைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனத்தில் முதலீடு செய்து தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் சொத்துக்களைச் சேர்ந்துள்ளார். இந்தச் சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
எஸ்டேட் பிளானிங்
இதற்காக ரத்தன் டாடா தனிப்பட்ட ஒரு டிரஸ்ட் அமைப்பை உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. estate planning என்பதை அடிப்படையாகக் கொண்டு ரத்தன் டாடா இந்தத் தனிப்பட்ட டிரஸ்ட் அமைப்பை உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. எஸ்டேட் பிளானிங் என்பது ஒரு தனிநபர் இயலாமை அல்லது இறப்பு ஏற்பட்டால் அவரது சொத்துக்களை நிர்வகிப்பதற்கான ஒரு கட்டமைப்பு.
85 வயதான ரத்தன் டாடா
85 வயதான ரத்தன் டாடா-வின் சொத்துக்கள், பணத்தில் மூலம் உருவாக்கப்படும் வருமானத்தை எதிர்காலத்தில் நன்கொடை மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கான நிதியளிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை ஐடியா உடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
டாடா டிரஸ்ட் மருத்துவமனை
டாடா டிரஸ்ட் இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு சேவை நோக்கத்துடன் டாடா மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனை துவங்கப்பட்டதாகும். டாடா டிரஸ்ட், கொல்கத்தாவில் டாடா மெடிக்கல் சென்டர் 2011 இல் செயல்படத் தொடங்கியது.
புற்றுநோய் மருத்துவமனை
இந்த மருத்துவமனையில் சுமார் 431 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் நடத்தி வருகிறது. இதே போன்ற மக்கள் நலன் திட்டங்களுக்கு நிதி அளிக்கவும், சேவை அளிக்கும் ரத்தன் டாடா தனது சொந்த சொத்துகள் மூலம் ஒரு டிரஸ்ட் அமைப்பை estate planning உடன் துவங்கியுள்ளார். இப்படி டாடா டிரஸ்ட் பல மக்கள் நலன் திட்டங்களுக்கு நிதியுதவி செய்துள்ளது.
ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் பவுண்டேஷன்
இப்புதிய ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் பவுண்டேஷன் (Ratan Tata Endowment Foundation) செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு இரண்டு இயக்குனர்கள் தற்போது நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒருவர் ராகவன் ராமச்சந்திர சாஸ்திரி, மற்றொவர் பர்சிஸ் ஷாபூர் தாராபோரேவாலா.
எண்டோவ்மென்ட் ஃபண்ட்
ஒரு எண்டோவ்மென்ட் ஃபண்ட் பொதுவாக, சில தொண்டு நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக வருவாயை ஈட்டுவதற்காக அமைக்கப்படும். ஒரு பொதுவான முதலீட்டு நிதியைப் போல் இல்லாமல் எண்டோவ்மென்ட் நிதியின் பலன்கள் ஒரு தனிப்பட்ட முதலீட்டாளருக்குச் செல்லாமல் இலாப நோக்கற்ற செயல்களுக்கும், நன்கொடையாக அளிக்கப்படுகிறது.
நன்கொடை மற்றும் தொண்டு நடவடிக்கை
அறக்கட்டளை மற்றும் பவுண்டேஷன்கள் பொதுவாக எஸ்டேட் பிளானிங்கிற்காக அமைக்கப்படுகின்றன, முதலீடுகளுக்காக அல்ல. அதிலும் முக்கியமான எண்டோவ்மென்ட் ஃபண்ட் நிதிகளின் வருமானம் நன்கொடை மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்காகச் செலவிட அமைக்கப்படும்.