இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
இதனால் ஏப்ரல் மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 70 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர், பல கோடி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் வர்த்தகச் சரிவை ஏற்பட்டு வருமான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
இதன் மூலம் மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இதைச் சமாளிக்க மத்திய நிதியமைச்சகத்திற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி செயல்பட்டு ஹோம் லோன், பர்சனல் லோன் பெற்றுள்ளவர்களுக்குச் சலுகை அளித்துள்ளது.
கொரோனா 2வது அலை
கொரோனா 2வது அலை துவங்கியதில் இருந்து நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது போலக் கடன் சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 2020ல் அறிவிக்கப்பட்ட 6 மாத கடன் சலுகை மூலம் வங்கிகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.
ரிசர்வ் வங்கியின் முடிவு
இந்தச் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி 2020ல் அறிவிக்கப்பட்ட கடன் மறுசீரைப்புத் திட்டத்தைத் தற்போது தனிநபர் கடன்களான ஹோம் லோன், பர்சனல் லோன் ஆகியவற்றுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த முடியாதவர்களுக்கு வங்கிகள் கடன் மறுசீரைப்பு 2.0 திட்டத்தின் கீழ் சலுகையை அளிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
கடன் மறுசீரைப்புச் சலுகை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சலுகை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி இந்தக் கடன் மறுசீரைப்பு சலுகையை அனைவருக்கும் அளிக்கவில்லை. கடனை செலுத்த முடியாதவர்கள் வங்கிகளை அணுகி இந்தச் சலுகையைப் பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
தனிநபர்களுக்கு விரிவாக்கம்
கடன் மறுசீரைப்புத் திட்டம் என்பது 2020ல் கடனை செலுத்த முடியாத சிறு நிறுவனங்களுக்கும், வர்த்தகங்களுக்கும் அளிக்கப்பட்டது. ஆனால் வங்கிகளின் நிதிநிலை ஏற்கனவே மோசமாக இருக்கும் காரணத்தால் இத்திட்டத்தைத் தற்போது தனிநபர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
2020 ஆண்டில் 6 மாத கடன் சலுகை
தனிநபர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் கிட்டதட்ட கடந்த வருடம் அளிக்கப்பட்ட 6 மாத கடன் சலுகை போலவே இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் இந்தச் சலுகையைப் பெற வங்கிகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாக உள்ளது. கொரோனா காலத்தில் வங்கிகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டு உள்ள நிலையில் கடனை செலுத்த முடியாதவர்கள் சரியாகத் திட்டமிட்டு இச்சலுகையைப் பெறுங்கள்.
ரிசர்வ் வங்கி நம்பிக்கை
இதுமட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தகம் மற்றும் நிதியியல் நிலையை மேம்படுத்த முதல் அறிவிப்பாக இருந்தாலும், அடுத்தடுத்து சிறிதும் பெரிதுமாக அறிவிப்புகள் வரும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications