இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அப்படி ஏதும் செய்யப்படவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.
எனினும் இது தவிர பல அறிவிப்புகளை அறிவித்தார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்.
இந்திய ரிசர்வ் வங்கி தனது ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்த அறிக்கையில், 50,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் காசோலைகளுக்கு Positive Pay என்ற பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
பணபரிவர்த்தனைகளில் பாதுகாப்பு
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்த செயல்முறையானது காசோலை பணபரிமாற்றங்களில் பாதுகாப்பினை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. காசோலை மூலமாக நிகழும் மோசடிகளை குறைக்கும் என்றும் கூறியுள்ளது. மோசடிகளை குறைக்கும் என்றாலே நிச்சயம் இது நல்ல விஷயம் தானே.
வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும்
ஆர்பிஐயின் இந்த திட்டத்தின் மூலம் காசோலைகள் வழங்கும்போது, அதன் வாடிக்கையாளர் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், பணம் எடுத்து கொள்பவர் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இது தொடர்பான வழிகாட்டுதல்கள் தனித்தனியாக வழங்கப்படும் என்றும் தாஸ் கூறியுள்ளார்.
இது ஒரு பாதுகாப்பு
இந்த பாசிட்டிவ் பே என்பது மோசடி தடுப்பு முறையாகும். இது பெரும்பாலான வணிக வங்கிகளால் நிறுவனங்களுக்கு போலியானவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆக இந்த பாசிட்டிவ் பே என்பது வங்கி பரிமாற்றத்தில் இன்னொரு அடுக்கு பாதுகாப்பினை வழங்குகிறது.
விவரங்களை பதிவேற்றலாம்
உதாரணத்திற்கு அதிக மதிப்புள்ள காசோலையை வழங்கும்போது ஒருவர் அதனை பற்றிய விவரங்களை வங்கியில் பதிவேற்றலாம். வங்கி பயனாளியிடமிருந்து காசோலையை பெறும்போது பதிவேற்றிய விவரங்களை சரிபார்த்து கொடுக்கலாம் என்றும் பாங்க் பஜாரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதில் ஷெட்டி சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியில் உண்டு
இந்த பாதுகாப்பு அம்சத்தினை ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கி கடந்த 2016லியே அறிமுகப்படுத்தியது. அதாவது ஒரு காசோலையை பயனாளிடம் வழங்குவதற்கு முன்பு, ஒருவர் அதனை ஐமொபைலில் அணுகலாம். அதில் காசோலை எண், தேதி, பணம் செலுத்துபவரின் பெயர், கணக்கு எண், எவ்வளவு தொகை போன்ற விவரங்களை அதில் குறிப்பிடலாம். மேலும் காசோலையில் முன்புறம் மற்றும் பின்புறம் படங்களை கிளிக் செய்து கொள்ளலாம்.
இது நல்ல விஷயம் தானே
இது காசோலை எப்போது வங்கியிடம் இருந்து கிளியரிங் வரும்போது, அதனை வங்கி ஒப்பிட்டு பார்த்து விவரங்கள் பொருந்தினால் மட்டுமே காசோலைக்கு செயல்படுத்தப்படுகிறது. இது நல்ல விஷயம் தானே.
உண்மையில் இது போலியான காசோலைகள், தவறான நபர்களிடம் செல்லும் காசோலைகள் என பல வடிவங்களில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும். எப்படி இருப்பினும் இது செயல்பாட்டு வந்தபிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்.