மத்திய ரிசர்வ் வங்கிக்கு இது போதாத காலம் போல் இருக்கிறது. கடந்த டிசம்பர் 2018-ல் தான் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் தன் சொந்த காரணங்களுக்காக தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து கடந்த ஜூன் 2019-ல் தான் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவராக இருந்த விரல் ஆச்சார்யா தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இப்போது இவர்களைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் இன்னொரு ஆளுநரும் ராஜினாமா செய்து இருக்கிறார்.
என் எஸ் விஸ்வநாதன்
மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவரான, என் எஸ் விஸ்வநாதனும் தன் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். இவருக்கு இன்னும் 3 மாத காலத்தில் முறையாக ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலை தொடர்ந்து ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி அனுபவம்
இவர் கடந்த 29 ஆண்டுகளாக மத்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்றிக் கொண்டு இருந்தவர். கடந்த மார்ச் 31, 2019-லேயே இவர் ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் கடந்த ஜூன் 2019-ல், இவருக்கு ஒரு ஆண்டுகால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவர் மத்திய ரிசர்வ் வங்கியில் வங்கி நெறிமுறைகள், கூட்டுறவு வங்கி, ஆய்வு போன்ற துறைகளில் வேலை பார்த்தவர்.
உடல் நிலை
இதுவரை வெளியாகி இருக்கும் செய்திகளில், அழுத்தம் சார்ந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவதால், ஓய்வு எடுக்கச் சொல்லி மருத்துவர்களே பரிந்துரைத்து இருக்கிறார்களாம். இவர் கடந்த ஜூன் 2016-ல் தான், மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக, ஹெச் ஆர் கான் அவர்களுக்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த ஜூன் 2019-ல் ஏற்கனவே சொன்னது போல மீண்டும் ஒரு வருட நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது தன் பணிக் காலம் முடிவதற்கு முன்பே, உடல் நிலை காரணமாக ராஜினாமா செய்து இருக்கிறார்.
அதற்கு முன்
என் எஸ் விஸ்வநாதன், ஆர்பிஐ துணை ஆளுநர் ஆவதற்கு முன்பு, ஆர்பிஐ வங்கியின் Non banking supervision துறையில் முதன்மைப் பொது மேலாளராகப் பணியாற்றினார். இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு படித்தவர். உர்ஜித் படேலுக்குப் பின் இவர் ஆர்பிஐ ஆளுநர் ஆக வாய்ப்பு இருப்பதாகக் கூடச் செய்திகள் வெளியானது நினைவு கூறத்தக்கது.