வங்கிகளில் கடன் வாங்கியவர்களிடம் கடன் தொகையை வசூலிக்க தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது என்பதும் அவர்கள் சில சமயம் அத்துமீறி கடன் வாங்கியவர்களிடம் நடந்துகொள்வதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி இதுகுறித்து புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பணியில் அமர்த்தும் கடன் மீட்பு முகவர்கள் கடன் பெற்றவர்களை மிரட்ட கூடாது என்றும், அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவர்களிடம் தொலைபேசியில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று கடன் வாங்கியவர்களிடம் வசூலிப்பது குறித்த புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி கடனை மீட்கும் முகவர்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டக்கூடாது என்றும் காலை 8 மணிக்கு முன்பும் மாலை 7 மணிக்குப் பின்பும் அவர்களை தொலைபேசியில் அழைக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
நடவடிக்கை
வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு இந்த கூடுதல் அறிவுரைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் கடன்களை வசூலிப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மிரட்டல் - தாக்குதல்
மேலும் கடன் வசூல் செய்யும் மீட்பு முகவர்கள் தங்கள் கடனை வசூல் செய்யும் முயற்சிகளில் எந்த ஒரு தனி நபருக்கும் எதிராக வாய் வார்த்தைகள் மூலமோ அல்லது உடல் ரீதியாக எந்தவிதமான மிரட்டல் விடுக்கவோ, தாக்குதல் நடத்தவோ கூடாது என்றும் வங்கிகள் கண்டிப்பாக இதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
அச்சுறுத்தல்
அதே போல் எந்த ஒரு வடிவத்திலும் கடன் வாங்கியவர்களுக்கு செல்போன் மூலம் தகாத செய்திகளை எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவைகள் மூலம் அனுப்ப கூடாது என்றும், அச்சுறுத்தும் வகையில் அந்த மெசேஜ்கள் இருக்கக்கூடாது என்றும் அறிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை
மேலும் கடன் பெற்றவர்களிடம் காலை 8 மணிக்கு முதல் மாலை 7 மணி வரை மட்டுமே கடனை திரும்பப் பெறுவது குறித்து பேச வேண்டும் என்றும், அதிலும் தவறான முறையில் பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிதி நிறுவனங்கள்
அதேபோல் கடன் வாங்கியவர்களிடம் மரியாதையாக பேச வேண்டும் என்றும், ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும், கடன் பெற்றவர்களை மிரட்டுதல் அல்லது துன்புறுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகள் அனைத்தும் தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு மட்டுமின்றி பிராந்திய கிராமிய வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications