இந்தியாவில் டிஜிட்டல் சேவை மற்றும் பேமெண்ட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்குடன் ரிசர்வ் வங்கி ஸ்மார்ட்போன் இல்லாத 40 கோடி பியூச்சர் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் புதிய யூபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் மார்ச் 8ஆம் தேதி (இன்று) UPI -123Pay எனப்படும் பியூச்சர் போன்களுக்கான UPI சேவையை அறிமுகம் செய்தார்.
123Pay சேவை
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் 123Pay சேவையைத் துவங்கி வைத்தது மட்டுமல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்காக 24x7 ஹெல்ப்லைனையும் சக்திகாந்த தாஸ் தொடங்கினார், இதற்கு டிஜிசாதி - DigiSaathi எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
கிராமப்புற மக்கள்
ஸ்மார்ட் போன் வாங்க முடியாத கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு UPI போன்ற டிஜிட்டல் நிதியியல் சேவைகளை அளிக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பியூச்சர் ஃபோன்கள் வைத்துள்ளவர்களும் பங்கேற்க UPI123Pay உதவும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
பியூச்சர் போன்
UPI123Pay சேவை மூலம் பியூச்சர் போன் அதாவது பட்டன் போன் வைத்துள்ளவர்கள், ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் அனைத்து இடத்திலும் பயன்படுத்த முடியும். அனைத்திற்கும் மேலாக இந்தச் சேவையைப் பயன்படுத்த இண்டர்நெட் இணைப்பு தேவையில்லை.
டிஜிட்டல் பேமெண்ட்
இந்தச் சேவையைப் பயன்படுத்த முன்கூட்டியே பியூச்சர் போன் வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி கணக்குடன் இந்த UPI123Pay சேவையைப் பயன்படுத்த இணைத்திருந்தால் போதும். இந்தச் சேவை மூலம் டிஜிட்டல் பேமெண்ட் சேவை நுழைய முடியாத கிராமம் மற்றும் சிறு டவுன் பகுதிகளுக்குள் எளிதாக நுழைய முடியும்.
UPI அறிமுகம்
இந்தியாவில் வங்கி கணக்குகள் மத்தியிலான டிஜிட்டல் பேமெண்ட் சேவையான UPI - Unified Payments Interface அறிமுகம் செய்த பின்பு பேமெண்ட் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏறபட்டு உள்ளது என ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் பியூச்சர் போனுக்கான சேவையான UPI 123PAY மூலம் ஊரகப் பகுதிகளிலும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வழி உருவாகியுள்ளது.