இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் குறியீடுகளில் ஒன்றான ஜிடிபி கடந்த இரண்டு காலாண்டுகளாக பயங்கரமாக சரிந்து இருக்கிறது.
ஜூன் 2019 காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி 5 சதவிகிதமாகவும், செப்டம்பர் 2019 காலாண்டில் ஜிடிபி 4.5 சதவிகிதமாகவும் வளர்ச்சி கண்டிருக்கிறது.
அதோடு இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கான மொத்த ஜிடிபி வளர்ச்சி ஏறக் குறைய 5 சதவிகிதமாக இருக்கலாம் என ஆர்பிஐ உட்பட பல அமைப்புகளும் தங்கள் கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
காரணம்
இப்படி இந்தியப் பொருளாதாரத்தின் ஜி டி பி வளர்ச்சி குறைவுக்கு, இந்தியாவில் நிலவும் தேவை சரிவு (Demand) தான் மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தேவை சரிந்து இருப்பதால், நுகர்வும், நுகர்வு சரிவால் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.
ஆர்பிஐ ஆளுநர்
இந்தியப் பொருளாதாரத்தில் தேவையை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், கொள்கை ரீதியிலான சீர் திருத்தங்கள் (Structural reform) தொடர வேண்டும், மேலும் புதிய சீர் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். பணக் கொள்கைகளுக்கு (Monetary Policy) ஒரு குறிப்பிட்ட எல்லைகள் இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
சிரமம் தான்
அதோடு, தற்போது இருக்கும் பொருளாதார சூழலைச் சரியாகக் கணித்து, சரியாக பணக் கொள்கைகளை வரையறுப்பது ஒரு சவாலான காரியம். உலகம் முழுக்க பல நாடுகளிலும் இந்த சிக்கல் நிலவிக் கொண்டு இருக்கிறது. எனவே தான் பல நாடுகளும், தங்கள் பணக் கொள்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்கள் எனவும் சொல்லி இருக்கிறார்.
வட்டி குறைப்பு
கடந்த 2019-ம் ஆண்டில், சிபிஐ என்று சொல்லப்படுகிற நுகர்வோர் பணவீக்கம் குறைவாக இருந்ததால், ஆர்பிஐ தைரியமாக தன் வட்டி விகிதங்களைக் குறைத்தது. மொத்தம் 1.35 சதவிகிதம் வட்டியைக் குறைத்து, தற்போது ஆர்பிஐயின் ரெப்போ ரேட் 5.15 சதவிகிதமாக இருக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் 4.90 சதவிகிதமாக இருக்கிறது.
தொடர்ந்து குறைப்பு
கடந்த பிப்ரவரி 2019 முதல் அக்டோபர் 2019 வரை தொடர்ந்து நான்கு முறை ஆர்பிஐ தன் வட்டி விகிதங்களைக் குறைத்து தன்னால் முடிந்த வரை இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய வேகத்தில் ஓட வைக்க முயற்சித்தது. இந்த ரெப்பொ ரேட் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி குறைப்பு
கம்பெனிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் குறைவான வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்ய வட்டி விகிதங்களைக் குறைத்ததுடன், மத்திய அரசு, தன் பங்குக்கு கார்ப்பரேட் வரியையும் கணிசமாக குறைத்தது. இருப்பினும் பொருளாதாரம் மேம்பட்டதாகத் தெரியவில்லை. என்ன செய்தும் கடலில் போட்ட பாராங்கல் கணக்காக அப்படியே கிடக்கிறது பொருளாதாரம்.
நிதி அமைச்சர் கையில்
இப்போது பணக் கொள்கை மாற்றத்தால் ஆவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல, ஆர்பிஐ ஆளுநரே சொல்லிவிட்டார். இனி எல்லாம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் தான் இருக்கிறது. ஆனந்த் மஹிந்திரா சொன்னது போல ஒரு மாஸான சூப்பர் பட்ஜெட் வரும் என எதிர்பார்ப்போம்.