இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்தி காந்த தாஸின் பதவி காலம் டிசம்பர் 10 உடன் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 11 முதல் இரண்டாவது முறையாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரே கவர்னராக நீட்டிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பணவீக்கம் என்பது மிக மோசமான நிலையில் உள்ளது.
இதனை சமாளிப்பதே மத்திய வங்கிக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் மோசமான சரிவு
எனினும் கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியிலும் பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க சிறப்பாக செயல்பட்டவர் தாஸ். மேலும் கடந்த ஆண்டில் பொருளாதாரம் மிக மோசமாக வரலாறு காணாத அளவுக்கு சரிவினைக் கண்டது. நாடு தழுவிய முழு லாக்டவுன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்தான காரணிகளும் முழுமையாக நின்று போனது.
பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்கள்
அந்த சமயத்தில் மக்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வட்டி விகிதம் குறைப்பு, மாத தவணை அவகாசம், கடன் சீரமைப்பு, பல்வேறு வகையான கடன் உதவிகள், குறிப்பாக தொழில் துறையை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தியது என பலவகையிலும் திறம்பட செயல்பட்டார். தற்போது வரையிலும் கூட சக்தி காந்த தாஸ் தலைமையிலான குழுவானது ரெப்போ விகிதத்தினை அப்படியே வைத்துள்ளது.
இரண்டாவது அத்தியாயத்தில் சக்தி காந்த தாஸ்
இப்படிப்பட்ட ஒரு கவர்னர் தற்போது இன்று முதல் அடுத்த மூன்றாண்டுகளுக்கு தனது இரண்டாவது அத்தியாயத்தினை தொடங்கியுள்ளார். எனினும் தற்போது பற்பல சவால்கள் அவருக்கு காத்துக் கொண்டுள்ளன. அதிகரித்து வரும் ஓமிக்ரான் அச்சத்தின் மத்தியில், பணவீக்கம் என்பது தற்போது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
குழுவில் எதிர்ப்பு
கடந்த சில மாதங்களாகவே மத்திய வங்கி கூட்டங்களில் வளர்ச்சியினை தக்க வைக்கவும், பணப்புழக்கத்தினை அதிகரிக்கவும் ரெப்போ வட்டி விகிதத்தினை அப்படியே வைத்திருக்க ஆர்பிஐ குழு தீர்மானம் செய்தது.
ஆனால் இந்த முறை சக்தகாந்த தாஸின் குழுவில் உள்ள ஜெயந்த் ஆர் வர்மா, ரிசர்வ் வங்கியின் நீண்டகால வளர்ச்சியினை அதிகரிப்பதற்கான நிலைப்பாட்டிற்கு எதிராக வட்டி விகிதத்தினை அப்படியே வைத்திருப்பதில் ஆர்வம் காட்டவில்லை என கருத்துகள் வெளியாகியுள்ளன.
அடுத்து என்ன செய்ய போகிறார்?
ஆக பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் வட்டி விகிதத்தினை அப்படியே வைத்திருப்பதா? பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க என்ன செய்ய போகிறார் என பல சவால்கள் உள்ளன. என்ன தான் செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.