இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் இன்று (டிசம்பர் 5) துவங்கி அடுத்த இரண்டு நாட்கள் நடக்க உள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்காக மாத சம்பளக்காரர்கள் முதல் தினமும் கோடி கணக்கில் பணத்தை டர்ன்ஓவர் செய்யும் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் வரையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் டிசம்பர் மாத நாணய கொள்கைக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகித உயர்வை நிறுத்தும் என்று எஸ்பிஐ பொருளாதார ஆய்வுக் குழு கணித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
டிசம்பர் 5-7 ஆம் தேதி நடக்க உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு சந்தை நிலவரத்தைப் பொருத்து 35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.35 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
பென்ச்மார்க் வட்டி விகிதம்
தற்போது இந்தியாவின் பென்ச்மார்க் வட்டி விகிதம் 5.9 சதவீதமாக இருக்கும் நிலையில், கணிக்கப்பட்டதன் படி 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தினால் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக இருக்கும். இந்த நிலையில் 6.25 சதவீதம் தான் டெர்மினல் ரேட்டாக இருக்கும் என எஸ்பிஐ வங்கி தனது சமீபத்திய SBI Ecowrap அறிக்கையில் தெரிவித்துள்ளது.
SBI Ecowrap அறிக்கை
உள்நாட்டு மற்றும் உலகளாவிய காரணிகள் மேம்படுவதை அடிப்படையாக வைத்து டெர்மினல் ரேட் குறித்த எஸ்பிஐயின் சமீபத்திய கணிப்புகள் வெளியாகியுள்ளது. டிசம்பர் 2022க்குப் பிறகு இந்தியாவின் பணவீக்கம் கீழ்நோக்கிச் செல்லும் என்று வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மார்ச் 2023க்குள் நாட்டின் பணவீக்கம் 5.2 சதவீதமாக வரும் எனக் கணிக்கப்படுகிறது.
மழை - சில்லறை பணவீக்கம்
அக்டோபர் 2022 இல் இந்தியா இயல்பை விட 54% மழையைப் பெற்றிருந்தாலும், அக்டோபர்-நவம்பர் 2022 இல், இந்தியாவின் அதிகப்படியான மழை 23% மட்டுமே அதிகம். இது நார்மல் அளவை காட்டிலும் சற்று அதிகம். இதனால் சில்லறை பணவீக்கத்தில் பருவகால மழையின் தாக்கம் மிகவும் குறைவாகத் தான் இருக்கும் என எஸ்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 7.2 சதவீதம் சரிந்தாலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் பலவீனமான நாணயமாக இல்லை என்றும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை
ஒவ்வொரு நாட்டின் பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷனுக்கு மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. இந்த நிலையில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை 0.35 சதவீதம் மட்டுமே உயர்த்த திட்டமிட்டு உள்ளதால் ரெசிஷன் அச்சம் இந்தியாவில் குறைந்துள்ளது.
வர்த்தகம், பொருளாதாரம் பாதிப்பு
ஒரு நாட்டின் மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்தால் புதிய கடன் வாங்குவது குறையும், ஏற்கனவே வாங்கிய கடனை செலுத்துவதும் குறையும். இதனால் வர்த்தகம், பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்படும்.
MCLR விகிதம்
இந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஒரு வருட MCLR விகிதம்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 7.70%
ஹெச்டிஎப்சி - 8.20%
ஆக்சிஸ் வங்கி - 8.05%
பஞ்சாப் நேஷ்னல் வங்கி - 7.75%
கனரா வங்கி - 7.90%
ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி - 9.00%
பந்தன் வங்கி - 10.00%
ஐடிபிஐ வங்கி - 7.85%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 7.75%


Click it and Unblock the Notifications