இந்திய வங்கிகளில் வாராக் கடன், கடன் மோசடி எனப் பலதரப்பட்ட பிரச்சனைகள் கடந்த சில வருடங்களாக உருவாகி வரும் நிலையில், இந்தப் பிரச்சனைகளைக் கையாள மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் படி 2020 ஜூன் மாதம் பல கட்ட ஆலோசனைகளுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளின் நிர்வாகத் தலைவர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் குறிப்பிட்ட காலம் வரையில் மட்டுமே பதவி இருக்க வேண்டும் எனத் திட்டத்தை முன்வைத்தது.
இந்த ஆலோசனை பல கட்ட விவாதங்களுக்குப் பின்பு புதிய அறிவிப்பாகவும், புதிய விதிமுறையாகவும் ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
சிஇஓ பதவி காலம்
இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்திய வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இனி அதிகப்படியாக 15 வருடங்கள் மட்டுமே இப்பதவியில் இருக்க வேண்டும் என்ற மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ப்ரோமோட்டர் சீஇஓ பதவி காலம்
இதேபோல் வங்கியின் நிறுவனர் அல்லது அதிகப் பங்குகளை வைத்துள்ள பங்குதாரார் அதாவாது ப்ரோமோட்டர் சீஇஓவாக இருப்பவர்கள் அதிகப்படியாக 12 வருடம் மட்டும் இப்பதவியில் இருக்க வேண்டும் என்றும், இதை வருகிற அக்டோபர் 2021க்குள் அனைத்து வங்கிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நடப்புப் பணிக்காலத்தில் பாதிப்பு இல்லை
மேலும் தற்போது குறிப்பிட்ட ஆண்டுக் காலத்தைக் கடந்து பணியாற்றும் உயர் அதிகாரிகள், அவர்களின் தற்போதைய பணிக்காலம் வரையில் பணியாற்றலாம். அதாவது வங்கி நிர்வாகம் 4 ஆண்டுக் காலம் பதவிக் காலம் கொடுத்திருந்தால், இந்த 4 ஆண்டுகளில் மீதமுள்ள காலகட்டத்திற்கு மட்டும் தலைவர் பதவியில் இருக்க முடியும்.
பெரும் பாதிப்பு
ரிசர்வ் வங்கியின் இப்புதிய உத்தரவு பல வங்கிகளின் தலைவர்களுக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது என்றால் மிகையில்லை. இந்தியாவில் பல முன்னணி வங்கிகளில் தலைவர்கள் 15 ஆண்டுகளுக்கு அதிகமான பணியாற்றி வந்த நிலையில் இனி இப்படிச் செய்ய முடியாது. சரி இப்புதிய உத்தரவால் யாருக்குப் பாதிப்பு..?
உதய் கோட்டாக் - கோட்டாக் மஹிந்திரா
ஆர்பிஐ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் முதலில் பாதிக்கப்படப் போவது கோட்டாக் மஹிந்திரா வங்கியின் உதய் கோட்டாக் தான். 2003- 04ஆம் நிதியாண்டில் இருந்து, இவ்வங்கியின் நிர்வாக இயங்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக விளங்கும் உதய் கோட்டாக் ஏற்கனவே 17 ஆண்டுகள் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் உயர் பதவியில் இருந்து நிலையில் இனி இருக்க முடியாது.
கோட்டாக் மஹிந்திரா வங்கி நிர்வாகம்
கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாகம் ஏப்ரல் 1, 2021ல் உதய் கோட்டாக்-ன் பதவிக் காலத்தை 3 வருடங்கள் நீட்டித்த நிலையில், ஜனவரி 2024 வரையில் மட்டுமே இப்பதவியில் இருக்க முடியும். இதற்கிடையில் குறைந்தபட்சம் ஏப்ரல் 2023க்குள் இவ்வங்கியின் புதிய தலைவரைத் தேர்வு செய்தாக வேண்டும்.
பெடரல் வங்கி மற்றும் ஆர்பிஎல் வங்கி
உதய் கோட்டாக்-ஐ தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு மூலம் கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெடரல் வங்கியின் MD & CEO ஷியாம் ஸ்ரீநிவாசன், ஆர்பிஎல் வங்கியின் MD & CEO விஸ்வாவீர் அகுஜா ஆகிய இருவரும் 2025 வரை மட்டுமே தலைவாராக இருக்க முடியும். இதற்குப் பின்பு பதவி விலக வேண்டியது கட்டாயம்.
பந்தன் வங்கி சந்திரசேகர் கோஷ்
இதேபோல் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கும் பந்தன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்திரசேகர் கோஷ் 5 ஆண்டுகள் தலைவராக இருக்கும் நிலையில் மீதமுள்ள 10 ஆண்டுகள் மட்டுமே தலைவராக இருக்க முடியும்.
முக்கியத் தனியார் வங்கிகள்
மேலும் நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளான ஹெச்டிஎப்சி வங்கியின் சிஇஓ சசிதர் ஜகதீசன், ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தீப் பக்ஷி, இன்ட்ஸ்இந்த் வங்கியின் சிஇஓ சுமந்த் காத்பாலியா ஆகியோர் சமீபத்தில் பணியில் நியமிக்கப்பட்ட காரணத்தால் அடுத்த 12 முதல் 14 ஆண்டுகள் வரையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
வயது வரம்பில் புதிய மாற்றம்
இதேபோல் 70 வயதிற்கு அதிகமானோர் யாரும் இந்திய வங்கிகளின் தலைவராகப் பணியாற்றக் கூடாது என்றும் விதிமுறை வைத்துள்ளது. மேலும் non-executive directors மற்றும் நிர்வாகத் தலைவர் பதவியில் இருப்பவர்கள் 75 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.