டெல்லி: வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசால் 6 மாதங்களுக்கு கடன் தவணை தள்ளிவைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி இஎம்ஐயை கட்டாத ஆறு மாதத்திற்கு வட்டி எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை.
அதேநேரம் வட்டி கட்டாத ஆறு மாதத்திற்கு வட்டிக்கு வட்டி போடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் வட்டிக்கு வட்டி போடுவதை கடுமையாக எதிர்த்த நிலையில் இறங்கி வந்த மத்திய அரசு, ஆறு மாத காலத்திற்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்று உறுதி அளித்தது.
என்னென்ன கடன்
இதன்படி அக்டோபர் 24 ம் தேதி நிதி அமைச்சகம் இந்த திட்டத்தின் விவரங்களை வெளியிட்டது. இந்த திட்டப்படி எம்.எஸ்.எம்.இ கடன்கள் மற்றும் வீட்டு கடன்கள், வாகன கடன்கள், பர்சனல் லோன், கிரிடிட் கார்டு லோன், நுகர்வோர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்கும் ரூ .2 கோடிக்கு மிகாமல் வாங்கியிருந்தால் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது,
ரிசர்வ் வங்கி உத்தரவு
இந்திய ரிசர்வ் வங்கி ஆறு மாத கால காலத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் மத்திய அரசின் திட்டத்தினை முறைப்படி இன்று அறிவித்துள்ளது. இதன்படி வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வசூலித்த தொகை
மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரையிலான காலப்பகுதியில், வட்டிக்கு வட்டி வசூலித்த தொகையை கடன் வாங்கியவர்களின் கணக்கில் வரவு வைக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கட்டாயம் திரும்ப கிடைக்கும்
எனவே கடன் வாங்கிய வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் அடுத்த சில நாட்களில் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகையை வங்கிகள் வர வைக்கும். இதேபோல் தனியார் நிதி நிறுவனங்களும் வசூலித்த தொகை கட்டாயம் திரும்ப அளிக்கும்.