மாஸ்டர் கார்டு நிறுவன டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
எனினும் ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு புதிய தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் விவரங்களை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் மாஸ்டர் கார்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பழைய வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு இல்லை
மேலும் ஜூலை 22 முதல் இந்தியாவில் புதியதாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனினும் ஏற்கனவே புழக்கத்தில் இந்த கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பது கவனிக்கதக்கது.
ஏன் இந்த தடை
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு இதற்காக போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்ட போதிலும் கூட, மாஸ்டர் கார்டு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தரவுகளை சேமிக்கவில்லை. ஆக ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு மாஸ்டர்கார்டு இணங்க மறுத்துள்ளதால், இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரச்சனை இருக்காது?
விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகும். எனினும் இந்தியாவில் ரூபே சேவை உள்ள நிலையில் உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும் சர்வதேச அளவில் புதியதாக பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தான் பிரச்சனை இருக்கும்.
பாதுகாப்பாக இருக்கும்
இந்த தடையானது நிரந்தர தடையாக விதிக்கப்படவில்லை. ஆக மாஸ்டர்கார்டு ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு ஏற்ப இங்கு டேட்டா சேமிப்பினை செய்யத் தொடங்கினால் மீண்டும் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுவும் ஒரு வகையில் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.