கிரிப்டோகரன்சிகள் குறித்தான தெளிவான நிலைப்பாடு என்பது இந்தியாவில் இதுவரையில் இல்லை எனலாம். கடந்த 2018ல் இந்தியாவில் செயல்படும் வங்கிகளில், கிரிப்டோகரன்சிகளோடு வணிகம் மேற்கொள்ளக் கூடாது என்ற தடையை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஆனால் அந்த தடையை 2020ல் மீண்டும் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
எனினும் தற்போது வரையிலும் சில வங்கிகள் கிரிப்டோகரன்சி குறித்த எச்சரிக்கையை பழைய அறிக்கையினை மேற்கோள் காட்டி வருகின்றன.
RBI பழைய அறிக்கை செல்லாது
இப்படி ஒரு நிலையில் தான் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை கிரிப்டோகரன்சிகள் குறித்து அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2018ல் அனுப்பப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி வங்கிகள் எச்சரிக்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு அந்த சுற்றறிக்கை செல்லாது என்றும் அறிவித்துள்ளது.
என்ன காரணம்
நாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, ஆர்பிஐயின் 2018 உத்தரவினை மேற்கோள் காட்டி, கிரிப்டோ கரன்சி வணிகம் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஆலோசனையை கொடுத்ததால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது அனுப்பப்பட்ட அறிக்கையின் படி, இந்த விதிகளை கடைபிடிக்க தவறினால் அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்ட பிறகு, அதை அனுமதிப்பதை தவிர ரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை. இதனால் ஆர்பிஐ வங்கிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என கூறியுள்ளது.
குழப்பமான நிலை
இதற்கிடையில் வங்கிகள் இதுபோன்ற ஒரு செயலை முதலில் ஏன் செய்தன? என்று பல கேள்விகளை எழுப்புள்ளார் கிரிப்டோ கரன்சி நிபுணர் ஹிடேஷ் மால்வியா.
உண்மையில் இதுவரையில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலையை ஏற்பத்தியது எனலாம். ஏனெனில் ரிசர்வ் வங்கி தடை விதிக்க, அதனை உச்ச நீதிமன்றம் தடையை நீக்கியது. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி இருந்து வந்தது.
முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதி
எனினும் தற்போது ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு, பெரும் நிம்மதியளித்துள்ளது எனலாம். ஏனெனில் ஏற்கனவே 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீடுகள் பிட்காயின் மற்றும் எத்தேரியம் போன்ற விர்சுவல் கரன்சிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தன.
ரிசர்வ் வங்கி பரிந்துரை
இதற்கிடையில் ரிசர்வ் வங்கி இந்த பரிவர்த்தனைகள் மோசடி நடவடிக்கைகள், மற்றும் வரி ஏய்ப்புகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதை வங்கிகள் மற்றும் கிரிப்டோ தளங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் KYC, பணமோசடி தடுப்பு (AML), பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் (CFT) மற்றும் PMLA வின் கீழ், தேவையான நடவடிக்கை எடுக்க வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு
கடந்த ஏப்ரல் 2018ம் ஆண்டு, ஆர்பிஐ கிரிப்டோகரன்சி குறித்து கெடுபிடியான சட்டத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி தொடர்பாக எந்த வித சேவையிலும் ஈடுபட முடியாதபடி செய்யப்பட்டது. ஏனெனில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மூலம் அனுப்பப்படும் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இதை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.
ரிசர்வ் வங்கியால் கண்கானிக்க முடியாது?
மேலும் இந்த பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கவும் முடியாது போன்ற பல்வேறு காரணங்களால், இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளைத் தடை செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதனையடுத்து தான் கடந்த 2018ல் ரிசர்வ் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்ஸிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது.
சொந்தமாக டிஜிட்டல் நாணயம்
மேலும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவித்திருந்தது. மேலும் ரிசர்வ் வங்கி சொந்த டிஜிட்டல் நாணயத்தை தொடங்க தயாராகி வருகிறது. ரிசர்வ் வங்கியின் சார்பிலேயே டிஜிட்டல் கரன்சி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு
அதனை உருவாக்கும் பணியில் ஆர்பிஐ குழு இறங்கியுள்ளது. மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி எவ்வாறு தொடங்கப்பட்டு வெளியிடப்படும் என்பது குறித்தும், தொழில்நுட்ப மற்றும் நடைமுறைகள் குறித்தும் ஆர்பிஐ குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும் என ஆளுநர் சக்தி காந்த தாஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் தான் தற்போது ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது. இது கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நிம்மதியினை கொடுத்தாலும், இந்தியாவில் டிஜிட்டல் நாணயம் வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது?