யாரும் எதிர்பார்க்காத வகையில் பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 2500 டாலர் வரையில் உயர்ந்து 22,890 டாலர் என்ற புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்து அசத்தியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் கொரோனா மருத்து மக்களுக்குச் செலுத்தப்பட்ட செய்தி வெளியான போது பிட்காயின் சில தடுமாற்றங்களைச் சந்தித்தாலும், புதன் மற்றும் வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான முதலீட்டைப் பெற்று புதிய உச்சத்தை அடைந்தது.
பிட்காயின் இப்புதிய உச்சத்தை அடைய என்ன காரணம்..?
கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாகப் பல நாட்டின் அரசும், முதலீட்டாளர்களும் அதிகளவிலான நிதி நெருக்கடியிலும், வர்த்தகச் சரிவிலும், வருவாய் பாதிப்பிலும் தவித்துக்கொண்ட போது பங்குச்சந்தை அதிகளவிலான வீழ்ச்சியை அடைந்தது. இதேவேளையில் கிரிப்டோகரன்சி அதிகளவிலான வளர்ச்சியை எதிர்கொண்டு அசத்தி வருகிறது.
தங்கம் Vs பிட்காயின்
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போது முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான முதலீடாக விளங்கியது தங்கம். ஆனால் இதே நேரத்தில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் பல முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக மாறியது கிரிப்டோகரன்சி முதலீடு.
பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு
உலக நாடுகள் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அதிகளவிலான தொகையை வளர்ச்சி திட்டங்களில் செலவு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக அதிகளவிலான பணத்தைப் பல நாடுகள் அச்சிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் உலகில் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து நாணய மதிப்பு குறையும் எனக் கணிப்புகள் உள்ளது.
டிமாண்ட் அதிகமானது
இந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை காப்பாற்றவும், எதிர்காலத்தில் தொடர்ந்து லாபத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில் பிட்காயின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்.
இதன் வாயிலாகப் பல கோடி முதலீட்டாளர்கள் கிரிப்டோகரன்சி சந்தைக்குள் புதிதாக நுழைந்துள்ள காரணத்தால் சந்தையில் பிட்காயின்-க்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.
உலக நாடுகள்
மேலும் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து அதிகளவிலான பிட்காயின்கள் வட அமெரிக்கச் சந்தைக்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளில் இன்னும் கிரிப்டோகரன்சி மீதான கட்டுப்பாடுகள் குறையாமல் இருக்கும் காரணத்தால் சிறு முதலீட்டாளர்கள் லாபத்தின் காரணமாக இக்காலகட்டத்தில் அதிகளவில் விற்பனை செய்துள்ளனர்.
இதனால் சுமார் 2,00,000 பிட்காயின்கள் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வட அமெரிக்கச் சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
நிறுவன முதலீட்டாளர்கள்
இதோடு கொரோனா காலத்தில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்த பல நிறுவன முதலீட்டாளர்கள், தனியார் பங்கு முதலீட்டாளர்கள், பென்ஷன் பண்ட் முதலீட்டாளர்கள் ஆகியோர் பிட்காயின் மீது அதிகளவில் முதலீடு செய்த காரணத்திற்காகவும் பிட்காயின் விலை புதிய உச்சம் அடைய முக்கியக் காரணமாக உள்ளது.
இதேபோல் கடந்த 6 மாத காலத்தில் 1000 பிட்காயின்களுக்கும் அதிகமாக வைத்துள்ள கணக்குகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.