கொரோனா பாதிப்பு, அமெரிக்கா உடனான வர்த்தகப் பிரச்சனை, வெளிநாட்டு முதலீட்டுக்கு விதிக்கப்பட்டு வரும் முதலீட்டுத் தடை எனப் பல்வேறு காரணங்களுக்காகச் சீன வர்த்தகம் கொரோனா பாதிப்பிற்குப் பின்பு பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சீனாவை உற்பத்தி மற்றும் சேவை தளமாக வைத்திருக்கும் பல நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான சலுகைகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் தற்போது பிரதமர் அலுவலகம், நித்தி அயோக், தொழிற்துறை மற்றும் வர்த்தக ஊக்குவிப்புத் துறை ஒன்றிணைந்து ஆலோசனை செய்து வருகிறது.
இலக்கு
இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிகளவிலான சலுகை மட்டும் அல்லாமல் அனைத்து விதமான முன்னுரிமையும் கொடுக்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்தியாவில் வர்த்தகம் துவங்கும் தொழிற்சாலைகளுக்கு மூலதன செலவுகளில் சில முக்கியச் சலுகையைக் கொடுக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மனமாற்றம்
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதையும் பாதித்த நிலையில், தற்போது பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தளத்தை ஓரே இடத்தில் இருந்து இயக்குவது தவறு என்ற புரிதலுக்கு வந்துள்ளது. இதோடு சீனா தற்போது பல்வேறு வர்த்தகப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் நிறுவனங்களுக்குக் கடுமையான நெருக்கடிகள் உருவாகியுள்ளது.
இதனால் பல நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறும் அல்லது சில பகுதி உற்பத்தியை வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் எனத் தெரிகிறது.
இந்தியா
இந்த வாயப்பை தான் இந்தியா கைப்பற்றத் திட்டமிட்டு ஒவ்வொரு துறைக்கும் பிரத்தியேக குழுவை அமைத்துச் சீனாவில் இருந்து வெளியேறும் முடிவில் இருக்கும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
100 நிறுவனங்கள்
இதுவரை இந்தியத் தரப்பில் இருந்து சுமார் 100 நிறுவனங்களிடமும், முதலீட்டாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. மேலும் இந்திய அரசு எந்த மாநிலத்தில் நிலம், வர்த்தக வாய்ப்பு, ஊழியர்கள் தேவை ஆகிய அனைத்து விதமான தகவல்களையும் சேகரித்து வைத்து தயாராக உள்ளது.
வியட்நாம்
கடந்த வருடம் இந்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரிக் குறைப்பு மற்றும் தற்போது விதிக்கப்பட உள்ள சலுகை மற்றும் தளர்வுகள் ஆகியவை வியட்நாம் நாட்டைக் காட்டிலும் இந்தியாவிற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வர அதிகளவிலான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து பல வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.