இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா, கடந்த செப்டம்பர் காலாண்டில் டைட்டன் கம்பெனியின் 50,000 பங்குகளை விற்றதாக சமீபத்திய ரெகுலேட்டரி ஃபைலிங் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேகா ஜுன்ஜுன்வாலா ஜூன் காலாண்டு நிலவரப் படி 97,40,575 பங்குகள் அல்லது டைட்டன் கம்பெனியின் ஒட்டு மொத்த பங்குகளில் 1.10 சதவிகித பங்குகளை வைத்திருந்தார்.
தற்போது செப்டம்பர் 2020 காலாண்டு நிலவரப்படி, 96,90,575 பங்குகளை அல்லது ஒட்டு மொத்த டைட்டன் கம்பெனியின் பங்குகளில் 1.09 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாக பிஎஸ்இ வலைதளத் தரவுகள் சொல்கின்றன.
ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் ஹோல்டிங் மாற்றமில்லை
இந்திய வாரன் பஃபெட்டான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா டைட்டன் கம்பெனி பங்குகளை விற்ற போதும், ராகேஷ் ஜுன் ஜுன்வாலா தன் பங்குகளை விற்கவில்லை. தொடர்ந்து, டைட்டன் கம்பெனியின் ஒட்டு மொத்த பங்குகளில் 4.43 சதவவிகித பங்குகளை வைத்திருக்கிறார். ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் சொத்து மதிப்பில் கணிசமான அளவு டைட்டன் பங்குகளால் உருவானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எல் ஐ சி & வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவன முதலீட்டாளரான (Institutional Investor) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் சில வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors) இந்நிறுவனத்தில் தங்கள் பங்குகளை முறையே 3.31 சதவிகிதமாகவும், 18.05 சதவிகிதமாகவும் இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் அதிகரித்து இருக்கிறார்கள். முந்தைய ஜூன் காலாண்டில் எல் ஐ சி 2.53 % பங்குகளையும், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் 17.55 % பங்குகளையும் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளியேறும் மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள்
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors) டைட்டன் கம்பெனியின் தங்கள் பங்குகளை அதிகரிக்கும் இந்த நேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள், டைட்டன் நிறுவன பங்குகளை 5.57 சதவிகிதத்தில் இருந்து 4.63 சதவிகிதமாகக் குறைத்து இருக்கின்றன. ஜூலை - செப்டம்பர் காலகட்டத்தில் டைட்டன் நிறுவன பங்குகளின் விலை சுமாராக 26 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் இண்டெக்ஸ் வெறும் ஒன்பது சதவிகிதம் தான் உயர்ந்து இருக்கிறது.
வியாபாரம் மீள்கிறது
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நகைகள் பிரிவில் விற்பனையை அதிகரித்து இருப்பதன் மூலம், மெல்ல மீண்டு வருவதாக கம்பெனி தரப்பே சொல்லி இருக்கிறது. கொரோனா பெரும் தொற்று நோயால், 2020 ஏப்ரல் - 2020 ஜூன் காலாண்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, டைட்டன் கம்பெனி, நிகர இழப்பாக 297 கோடி ரூபாயைக் காட்டியதும் இங்கு நினைவு கூறத்தக்கது.