ரிலையன்ஸ் ஜியோ கடந்த செப்டம்பர் 2016-ல் களம் இறங்கிய போதே, பல இலவச திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை அசால்டாக வளைக்கத் தொடங்கியது. இப்போது வரை அதே டெக்னிக்கை வைத்து வாடிக்கையாளர்களை வளைத்துப் போட்டுக் கொண்டே வருகிறது.
இப்போது கூட, ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் புதிய திட்டங்களால், ஏர்டெல் கம்பெனி பங்குகளின் விலை அட்டம் காணத் தொடங்கி இருக்கிறது. வொடாபோன் ஐடியா கம்பெனி தடுமாறிக் கொண்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ அப்படி என்ன திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள். ஏர்டெல் பங்கு விலை எவ்வளவு ரூபாய் விலை சரிந்து இருக்கிறது போன்ற விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோவின் fixed broadband திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோ தன் பிராட்பேண்ட் வியாபாரத்தைப் பெருக்க, அதிரடி விலை குறைப்போடும், ஏகப்பட்ட சலுகைகளோடும் தன் பிராட்பேண்ட் திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இது ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா கம்பெனியின் வியாபாரத்தை நேரடியாக பாதித்து இருக்கிறது. ஜியோவுக்குத் தகுந்தாற் போல, ஏர்டெல் & விஐ தங்கள் பிராட்பேண்ட் திட்டங்களின் விலையைக் குறைத்து, சலுகைகளை அதிகரித்து இருக்கிறார்கள்.
postpaid-ல் களம் இறங்கும் ரிலையன்ஸ் ஜியோ
இந்தியாவின் ஒட்டு மொத்த postpaid வாடிக்கையாளர்களில் 71 சதவிகிதம் பேர், ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா கம்பெனியின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இந்த பிரிவையும் வளைக்க, தற்போது ரிலையன்ஸ் ஜியோ அதிரடியாக திட்டங்களைக் களம் இறக்கத் தொடங்கி இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவிடம் மாதம் 199 ரூபாய்க்கு ஒரு போஸ்ட்பெய்ட் திட்டம் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் & வொடாபோன் ஐடியாவுக்கு செலவு அதிகரிக்கும்
இப்படி எல்லா பிரிவிலும், ரிலையன்ஸ் ஜியோ உடன் போட்டி போட வேண்டும் என்றால், ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு 1,800 - 2,500 கோடி ரூபாய் கூடுதலாக செலவு வைக்கும் என்கிறது ஐசிஐசிஐ டைரக்ட் ரிசர்ச் கம்பெனி. இந்த கூடுதல் செலவுகள் போக, அடுத்த பல ஆண்டுகளுக்கு ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியாவுக்கு இருக்கும் ஏஜிஆர் நிலுவைத் தொகை வேறு பெருஞ்சுமையாக இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி ஸ்மார்ட்ஃபோன்
ரிலையன்ஸ் ஜியோ தன் திட்டங்களை அதிரடியாக அறிவித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் விலை மலிவான ஸ்மார்ட்ஃபோன்களை தயாரிக்கும் வேலையிலும் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறன. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ஸ்மார்ட்ஃபோன் சந்தைக்கு வந்தால், இன்னும் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கணிசமாக அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
ஆட்டம் காணும் ஏர்டெல் பங்கு விலை
சில வாரங்களுக்கு முன்பு, ஏர்டெல் பங்கின் விலை சுமாராக 550 ரூபாய்க்கு வர்த்தகமானது. இப்போது சுமாராக 22 % விலை சரிந்து 425 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த விலை சரிவுக்கு மிக முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி திட்டங்கள் தான் என்கிறது லைவ் மிண்ட் செய்திகள்.
வொடாபோன் ஐடியா தடுமாற்றம்
ஏர்டெல் கம்பெனியின் பங்குகள் தான் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் வொடாபோன் ஐடியாவுக்கு ஏஜிஆர் நிலுவைத் தொகையைச் செலுத்த, நீதிமன்றம் கால அவசகாசம் கொடுத்ததனால் தான் தப்பிப் பிழைத்து இருக்கிறது. இந்த நெருக்கடியான சூழலில் ஒரு பக்கம் நிலுவைத் தொகை செலுத்த வேண்டும், மறு பக்கம் ரிலையன்ஸ் ஜியோ உடன் போட்டி போட கூடுதலாக செலவழித்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பயங்கரமாக தடுமாறிக் கொண்டு இருக்கிறது விஐ கம்பெனி.