கடந்த செப்டம்பர் 2016-ல் முகேஷ் அம்பானி தலைமையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களம் இறங்கியது. சரியாக மூன்றே ஆண்டுகள் தான், இந்தியாவில் 30 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைப் பெற்று, இந்தியாவின் இரண்டாவது அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
2016-க்கு முன், ஒரு ஜிபி டேட்டாக்கு 150 ரூபாய் கொடுத்து, பூ போல பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது, ரியல் டைமில் லைவ் நியூஸை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பற்றாக்குறைக்கு யூ டியூப், அமேசான் ப்ரைம், நெட் ஃப்ளிக்ஸ், ஜி 5 என பல ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீங் சேவை நிறுவனங்களும் இந்தியாவில் கல்லா கட்டத் தொடங்கி இருக்கின்றன. எல்லாத்துக்கும் காரணம் நம் ஜியோ தான்.
2016-க்கு முன்பு வரை ஓரளவுக்காவது லாபம் பார்த்துக் கொண்டிருந்த ஏர்டெல், வொடாபோன், ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்கள், ஜியோவின் வருகைக்குப் பின் பலமாக அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் மட்டும் ஏர்டெல் 23000 கோடி ரூபாய் மற்றும் வொடாபோன் ஐடியா 50,000 கோடி ரூபா நஷ்டக் கணக்கு காட்டி இருக்கிறார்கள்.
இந்த நஷ்டத்தில் இருந்து மீள, ஜியோ உட்பட அனைத்து நிறுவனங்களும் போன்களுக்கான ரீ சார்ச் கட்டணத்தை உயர்த்த சத்தம் இல்லாமல் சம்மதித்து இருக்கிறார்கள். அரசும் சில கட்டணம் சார்ந்த மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறதாம். இதற்கு இடையில் மீண்டும் ஜியோ தன் வேலையைக் காட்டத் தொடங்கி இருக்கிறது. இந்த முறை பிராட்பேண்ட் சேவையில்.
ஆம் ஜியோவின் பிராட்பேண்ட் சேவைகள் ஜியோ ஃபபர் என்கிற பெயரில் வழங்க இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் ஜியோ ஃபபர் திட்டத்தின் கீழ் 2,500 ரூபாய் கட்டணம் + மாதா மாதம் 699 ரூபாய் கட்டணம் எனச் சொல்லி இருந்தார்கள்.
ஆனால் இப்போது புதிதாக கொண்டு வந்திருக்கும் திட்டத்தில், இந்த 2,500 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த வேண்டாம். வெறுமனே, மாதம் 351 ரூபாய் செலுத்தினால் போதும். இந்த 351 ரூபாய் திட்டத்தைப் பெறுபவர்களுக்கு 10 எம் பி பி எஸ் வேகத்தில், 50 ஜிபி டேட்டா வழங்க இருக்கிறார்களாம்.
அதோடு 199 ரூபாய் விலைக்கு, 7 நாட்களுக்கு, 100 எம் பி பி எஸ் வேகத்தில் Unlimited டேட்டா திட்டத்தையும் களம் இறக்க இருக்கிறார்களாம்.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்கள் மற்றும் திருச்சி, கோவை, மதுரை போன்ற டயர் 1 நகரங்களைத் தவிர மற்ற டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் ஜியோ ஃபபர் திட்டம் பரவ இந்த 351 ரூபாய் திட்டம் உதவும் எனச் சொல்லி இருக்கிறார்கள் டெலிகாம் துறை அனலிஸ்டுகள்.
ஆக இதுவரை செல்போன் சேவைகளில் விலையைக் குறைத்து 3 வருடத்தில் இந்தியாவின் நம்பர் 2 இடத்துக்கு வந்தது போல, அடுத்த சில ஆண்டுகளில், இந்தியாவின் பிராட்பேண்ட் சேவையில் நம்பர் 1 ஆக இந்த திட்டங்களை களம் இறக்கிக் கொண்டு இருக்கிறது அம்பானியின் ஜியோ.
ஜியோவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், மீண்டும் ஏர்டெல், வொடாபோன் ஐடியா நிறுவனத்தினர்கள் தூக்கத்தை தொலைத்து இருக்கிறார்கள். இந்தியாவில் டெலிகாம் தியேட்டர்ல சும்மா கிழி தான்..!