இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 2016ல் ஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தின் மூலம் டெலிகாம் துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து டெலிகாம் சேவை வாடிக்கையாளர்களை அடிப்படையாக வைத்து ரீடைல் வர்த்தகத்தையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் திட்டமிட்ட முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனத்தில் 3400 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கூகுள் முதலீடு செய்த காரணத்தால், இந்தியாவில் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்-ஐ உருவாக்கி விற்பனை செய்யும் மிக முக்கியமான திட்டத்திற்கு இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்தது.
ஜியோ - கூகுள் கூட்டணி
ரிலையன்ஸ் ஜியோ - கூகுள் கூட்டணி பல கட்ட ஆலோசனை, திட்டமிடல் மூலம் உலகிலேயே யாரும் அளிக்க முடியாத விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் தயாரித்து வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தித் தினத்தில் இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
பியூச்சர் போன் வாடிக்கையாளர்கள்
இந்த ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் இருக்கும் 300 மில்லியன் அதாவது 30 கோடி பியூச்சர் போன் வாடிக்கையாளர்களை ஸ்மார்ட்போன் சந்தைக்குள், அதுவும் ஜியோ தளத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே முகேஷ் அம்பானியின் திட்டம்.
4ஜி ஸ்மார்ட்போன்
இதற்காகவே 4ஜி ஸ்மார்ட்போனை கூகுள் உடன் இணைந்து இந்தியாவிற்கெனப் பிரத்தியேகமாக ஆண்ட்ராய்டு மென்பொருளை மறு சீரமைப்புச் செய்து, சாமானிய மக்கள் அனைவரும் தினசரி பயன்படுத்தும் முக்கியமான செயலிகள் சேவைகளைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு உள்ளது.
30 கோடி மக்கள்
இந்தியாவில் இன்னும் அதிகளவிலான மக்கள் பியூச்சர் போன்களைப் பயன்படுத்தி வருகிறார்கள், 30 கோடி வாடிக்கையாளர்கள் என்றால் காரணம் இல்லை, கிட்டதட்ட தற்போது ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை.
ரிலையன்ஸ் ஜியோ
தற்போது ரிலையன்ஸ் ஜியோ இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் மூலம் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத அளவில் குறைந்த காலகட்டத்தில் உயர உள்ளது.
2 போன் மாடல்கள்
ரிலையன்ஸ் ஜியோ செப்டம்பர் 10ஆம் தேதி ஜியோபோன் நெக்ஸ் பெயரில் சுமார் 2 போன் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் மேசிக் மாடலான ஜியோபோன் நெக்ஸ் 5000 ரூபாய் விலையிலும், ஜியோபோன் நெக்ஸ் அட்வான்ஸ் போன் 7000 ரூபாய் விலையில் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஜியோ அதிகாரப்பூர்வ விலையை இன்னுமும் வெளியிடவில்லை.
500 ரூபாய் விலையில் விற்பனை
வழக்கம் போல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ஜியோபோன் நெக்ஸ் மாடல் போன்களைத் தனது ஆஸ்தான திட்டமான 500 ரூபாய் அல்லது மொத்த விலையில் 10 சதவீத தொகைக்கு விற்பனை செய்யத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஜியோபோன் நெக்ஸ் மாடல் போன்களின் விற்பனை துவங்க 7 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
6 மாத இலக்கு
இந்தியாவில் அடுத்த 6 மாத காலத்தில் 5 கோடி போன்களை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளார் முகேஷ் அம்பானி. ஜியோபோன் நெக்ஸ் மாடல்கள் வெறும் 10 சதவீத தொகையில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி மற்றும் நிதி நிறுவனத்துடன் கூட்டணி
அனைத்து தரப்பினருக்கும் போன்கள் சென்று அடைய வேண்டும் என்பதற்காக நிதி சேவைக்காக ரிலையன்ஸ் ஜியோ, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பிராமல் கேப்பிடல், ஐடிஎப்சி பர்ஸ்ட் அசூர் மற்றும் DMI பைனான்ஸ் ஆகிய நிதி நிறுவனங்கள் உடன் கூட்டணி அமைத்துள்ளது.
முகேஷ் அம்பானி திட்டம்
முகேஷ் அம்பானிக்குத் தற்போது போன் விற்பனை செய்வது பெரிய விஷயமில்லை, அதன் மூலம் கிடைக்கும் டெலிகாம் வாடிக்கையாளர்கள், ஷாப்பிங் வர்த்தகம், கூகுள் நிறுவனத்திற்குக் கிடைக்கும் கூகுள் பே வாடிக்கையாளர், இதன் மூலம் பெறப்படும் வர்த்தகம் தான் இரு தரப்புக்கும் மிகவும் முக்கியமானது.
டிஜிட்டல் பேமெண்ட் துறை
சொல்லப்போனால் ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ஜியோபோன் நெக்ஸ் மூலம் டெலிகாம் துறையில் ஏற்படும் புரட்சியை விடவும் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் நடக்கும் புரட்சி தான் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதைப் பற்றி அடுத்தக் கட்டுரையில் விலக்கமாகப் பார்க்கலாம்.