கடந்த செப்டம்பர் 2016-ல் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ களத்தில் இறங்கியதில் இருந்தே இந்திய டெலிகாம் துறையே ஒரு நிலையற்ற தன்மையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அது நாள் வரை ஒரு ஜிபி டேட்டா 150 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அதே 150 ரூபாயில் ஒரு மாதத்துக்கு 30 ஜிபி டேட்டா வாங்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
இதை எல்லாம் விட கொடுமை என்ன என்றால், ரிலையன்ஸ் ஜியோ இப்படி டேட்டாவை கூறு பத்து ரூபாய் மேனிக்கு குறைத்து விற்றதால், ஏர்டெல், வொடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் தங்கள் டேட்டா திட்டங்களின் விலையை படு பயங்கரமாக குறைக்க வேண்டி வந்தது.
போதும்யா
கடந்த அக்டோபர் 2019-ல், இந்திய டெலிகாம் கம்பெனிகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின் ஏர்டெல் சுமாராக 35,000 கோடி ரூபாயும், வொடாபோன் ஐடியா சுமாராக 53,000 கோடி ரூபாயும் அரசுக்கு லைசென்ஸ் தொகையாகச் செலுத்த வேண்டி வந்தது. இதன் பின் தான் "என்ன ஆனாலும் சரி மாப்ள, இனியாவது நமக்குள்ள போட்டி போடாம வியாபாரத்துல லாபம் பார்க்கலாம்" என அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தார்கள்.
40 சதவிகிதம்
ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா கிட்டத்தட்ட தன் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை சுமாராக 40 சதவிகிதம் வரை அதிகரித்தார்கள். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மட்டும் சூதானமாக, ஏர்டெல் & வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் ரீசார்ஜ் திட்டங்களை விட குறைவான விலைக்கே தன் ரீசார்ஜ் திட்டங்கள் இருக்குமாறு விலை ஏற்றம் செய்தார்கள். எனவே இப்போது வரை ஜியோ தான் பெரும்பாலான ரீசார்ஜ் திட்டங்களை குறைந்த விலைக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
போட்டியில் ஒரு வருட திட்டம்
இன்றைய தேதிக்கு நடுத்தர குடும்பங்களிலேயே, ஒரு முழு ஆண்டுக்கு ரீசார்ஜ் செய்வது எல்லாம் சாதாரணமாகிவிட்டது. எப்படியும் ஆண்டு முழுக்க போன் பேசுவோம். யூ டியூபில் வீடியோ பார்ப்போம். பிறகு ஏன் நாம் ரீசார்ஜ் செய்து வைக்கக் கூடாது என லாஜிக் பேசுவார்கள். அதை எல்லாம் விட ஆண்டுக்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு நாம் கொடுக்கும் பணத்தின் அளவு பெரிய அளவில் குறையும் என்றும் சொல்வார்கள்.
உதாரணம்
ரிலையன்ஸ் ஜியோவில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், ஜியோ செயலி சப்ஸ்கிரிப்ஷன், ஜியோ டு ஜியோ இலவச வாய்ஸ்கால்கள் போன்றவைகள் சலுகைகள், எல்லா திட்டங்களிலும் வரும். ஒரு முழு ஆண்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றுக்கு இந்த டெலிகாம் சேவைக்கு நாம் கொடுக்கும் பணம் கொஞ்சம் குறையும்.
ஜியோ திட்டங்கள் உதாரணம்
199 ரூபாய் திட்டம், 28 நாள் வேலிடிட்டி, நாள் ஒன்றுக்கு 7.1 ரூபாய் செலவாகும்.
399 ரூபாய் திட்டம் 56 நாள் வேலிடிட்டி நாள் ஒன்றுக்கு 7.1 ரூபாய் செலவாகும்.
555 ரூபாய் திட்டம் 84 நாள் வேலிடிட்டி நாள் ஒன்றுக்கு 6.6 ரூபாய் செலவாகும்.
2121 ரூபாய் திட்டம் 336 நாள் வேலிடிட்டி நாள் ஒன்றுக்கு 6.31 ரூபாய் செலவாகும். மேலே சொன்ன எல்லா திட்டங்களிலும், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், ஜியோ செயலி சப்ஸ்கிரிப்ஷன், ஜியோ டு ஜியோ இலவச வாய்ஸ்கால்கள் போன்றவைகள் சலுகைகள் உண்டு. எனவே ஆண்டு திட்டம் தான் பெஸ்ட் என ரீசார்ஜ் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விலை ஏற்றம்
இப்போது இந்த ஆண்டு திட்டத்தில் தான், நம் ரிலையன்ஸ் ஜியோ கை வைத்து இருக்கிறார்கள். இதற்கு முன். வெறும் 2020 ரூபாய்க்கு, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், 1.5 ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச வாய்ஸ் கால்கள், ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 12,000 நிமிடங்கள் இலவசம், ஜியோ அப்ளிகேஷன் சப்ஸ்கிரிப்ஷன், 336 நாள் வேலிடிட்டி இருந்தது. இப்போது இந்த ரிசார்ஜ் திட்டத்தின் விலையை 101 ரூபாய் அதிகரித்து இருக்கிறார்கள். ஆனால் பழைய திட்டத்தில் இருக்கும் சலுகைகள் எல்லாமே கிடைக்குமாம்.
மற்ற நிறுவனங்கள்
ஏர்டெல் நிறுவனம் கூட இப்படி ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வைத்து இருக்கிறார்கள். 2,398 ரூபாய்க்கு, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா + 100 எஸ் எம் எஸ், 365 நாள் வேலிடிட்டி கொடுக்கிறார்கள். இந்த திட்டத்தை தேர்வு செய்தால், நாள் ஒன்றுக்கு 6.56 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். இதே போல வொடாபோன் ஐடியாவும் 2,399 ஏர்டெல்லைப் போலவே எல்லா வசதிகளையும் கொடுக்கிறார்கள்.
101 ரூபாய் விலை அதிகம்
இந்த ஒரு ஆண்டு திட்டத்தில் கூட ரிலையன்ஸ் ஜியோ தான், இப்போது வரை மிகக் குறைந்த விலைக்கு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கினாலும், சமீபத்தில் 101 ரூபாய் விலை அதிகரித்து இருப்பது கொஞ்சம் ஜியோ வாடிக்கையாளர்களை ஜர்க் அடிக்க வைத்திருக்கிறது. இந்த விலை ஏற்றத்துக்குப் பின்னும் ஏர்டெல், வொடாபோன் ஐடியா திட்டங்களை விட ரிலையன்ஸ் ஜியோவின் திட்டம் தான் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.