இந்தியா என்கிற வியாபார சந்தையையும், மக்களின் வாங்கும் திறனையும் பங்கு போட, உலக நிறுவனங்கள் தொடங்கி உள்ளூர் நிறுவனங்கள் வரை போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.
இதற்கு சமீபத்தைய உதாரணம், இந்தியாவில் இருக்கும் பேமெண்ட் நிறுவனங்கள். உள்ளூரில் பேடிஎம், மொபிக்விக், போன் பே, வங்கி இ வேலட்டுக்கள் தொடங்கி, வெளிநாட்டின் கூகுள் பே, அமேசான் பே வரை அனைவரும் இந்திய பேமெண்ட் பிசினஸ் அப்பத்துக்கு ஆசைபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது, இந்த, இந்திய பேமெண்ட் வங்கி அப்பத்தின், நடு சென்டரில் காம்பஸ் வைத்து இருக்கிறார் முகேஷ் அம்பானி.
வந்துட்டாருங்க
புரியவில்லையா..? இந்திய பேமெண்ட் வியாபாரத்தில் களம் இறங்கிவிட்டார் முகேஷ் அம்பானி. கடந்த 2018-ம் ஆண்டிலேயே, முகேஷ் அம்பானி ஜியோ மணி என்கிற பெயரில் ஒரு பேமெண்ட் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார். இந்த ஜியோ மணி நிறுவனத்தின் 30 சதவிகிதம் பங்கு எஸ்பிஐக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சேவைகள்
இப்போதைக்கு ஜியோ மணி அப்ளிகேஷன் வழியாக மொபைல் ரீசார்ஜ் செய்வது, டிடிஹெச் ரீசார்ஜ் செய்வது, மின்சார கட்டணங்களைச் செலுத்துவது, கேஸ் பேமெண்ட் செய்வது, பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வது என எல்லா பேமெண்ட் அப்ளிகேஷன்களில் இருக்கும் வசதிகள் இதிலும் இருக்கின்றன. ஆனால் இப்போது புதிதாக ஒரு வெங்காய வெடியை உருட்ட இருக்கிறது ஜியோ.
நிதி சேவை
இந்தியாவில் நிதி சார்ந்த முதலீடுகள் இப்போது தான் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதி சேவைகளை, விரைவில் ஜியோ மணியில் இருந்தே பெறலாமாம். இந்த நிதி சேவையைத் தான் அடுத்த ஆண்டுக்குள் வழங்க திட்டமிட்டு இருக்கிறதாம். இந்த நிதி சார்ந்த சேவைகள் என்ன, அத்தனை பெரிய வியாபாரமா..?
நிதி சேவைகள்
இந்தியாவில் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் வழியாக நிர்வகித்து வருகிறார்கள். சுமார் 8.65 கோடி முதலீட்டாளர்கள் முதலீடு செய்து இருக்கிறார்களாம். இத்தனை பெரிய வியாபார துறையை நோக்கித் தான், முகேஷ் அம்பானி மற்றும் எஸ்பிஐ களம் இறங்கி இருக்கிறார்கள்.
வளர்ச்சி
கடந்த 2009-ம் ஆண்டு வாக்கில், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 8.22 லட்சம் கோடி ரூபாய் பணத்தைத் தான் நிர்வகித்து வந்தார்கள். ஆனால் இப்போது 2019-ம் ஆண்டு வாக்கில் 27 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறார்கள் என்றால், நீங்களே வளர்ச்சியை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த 27 லட்ச கோடி ரூபாயை சந்தையை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் எஸ்பிஐயும் ஜியோவும் களம் இறங்கி இருக்கின்றன.
ஆட்கள்
நிர்வகிக்கும் பணத்தின் அளவு அதிகரித்து இருப்பதைப் போல, முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. கடந்த 66 மாதமாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போது சுமாராக 8.65 கோடி பேர் முதலீடு செய்து இருக்கிறார்களாம்.
சில்லறை வியாபாரம்
இந்த 8.65 கோடி முதலீட்டாளர்களில், 7.72 கோடி முதலீட்டாளர்கள், நம்மைப் போன்ற சாதாரண மக்கள் முதலீடு செய்தது தானாம். இவர்களை Retail Investors என்று சொல்வார்கள். மீதமுள்ளவர்கள் தான் பெரிய பணக்காரர்கள், நிறுவனங்கள், டிரஸ்டுகள் எல்லாம். எனவே மேற்கொண்டு புதிய வாடிக்கையாளர்களைப் பிடித்து கல்லா கட்ட திட்டமிட்டு களம் இறங்க இருக்கிறது முகேஷ் அம்பானியின் ஜியோ.
இவர்கள் பார்ட்னர்ஷிப்பைப் பார்த்தால், கூகுள் பே, அமேசான் பேவை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள் போலிருக்கிறதே..?