இந்த புத்தாண்டில் ஆவது கொரோனா என்னும் கொடிய அரக்கன் ஒழியட்டும். மக்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த ஆண்டாக 2021 அமைய வாழ்த்துகளுடன், இந்த புத்தாண்டில் என்னென்ன சலுகையெல்லாம் வரப்போகின்றன என பார்க்கலாம் வாருங்கள்.
தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ அடியெடுத்து வைத்த சில ஆண்டுகளிலேயே, தனிகாட்டு ராஜவாக வலம் வந்து கொண்டு உள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், மற்ற நிறுவனங்களின் கட்டணங்கள் கூட கணிசமான அளவு குறைந்துள்ளது. அதிலும் ஜியோவின் வருக்கைக்கு பிறகு தான் இலவச அழைப்புகள் என்ற முறையே வந்தது என்று கூட கூறலாம்.
இனி அனைத்து கால்களுக்கும் இலவசம்
இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகையாக, இலவச கால் சேவை அளித்துள்ளது. அதாவது ஜனவரி 1, 2021 முதல் இனி எல்லா அழைப்புகளும் இலவசமாக அழைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. எனினும் இது உள்நாட்டு அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறியுள்ளது.
என்ன காரணம்?
சமீபத்தில் தான் ஜியோ ஐயூசி கட்டணத்தினை வசூலிக்க தொடங்கியது. இது அதன் வாடிக்கையாளர்களை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியது. இதற்கிடையில் சமீப மாதங்களாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிக சந்தாதாரர்களை இணைத்தும் வருகிறது. இதனையடுத்து ரிலையன்ஸ் ஜியோ இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பினையும் கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஐயூசி கட்டணம்
இந்தியாவின் அதிவேக 4ஜி சேவை வழங்கும் நெட்வொர்க்கான ஜியோ, ஏற்கனவே குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஐயூசி என்ற கட்டணத்தை நிர்ணயித்திருந்தது. அதற்காக நிமிடத்திற்கு 6 காசுகள் வீதம் மற்ற அழைப்புகளை மேற்கொள்ளும்போது தொலைதொடர்பு நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஐயூசி கட்டணம் ரத்து
தற்போது, ஜனவரி 1 முதல், மற்ற நெட்வொர்க்குக்கான ஐயூசி அழைப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக TRAI அறிவுறுத்தலின் படி, ஜியோ அறிவித்துள்ளது. இதையடுத்து, இனி ஜியோ வாடிக்கையாளர்கள் தடையில்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற நெட்வொர்க்குகளுக்கு பிரச்சனை தான்
உண்மையில் இது சிறந்த புத்தாண்டு சலுகையாகவே அதன் வாடிக்கயாளர்களுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் இந்த சலுகையானது போட்டி நிறுவனங்களாக வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல்லுக்கு மீண்டும் சிக்கலையே கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக 2021ல் ஜியோ தன் வசம் உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், போட்டியை சமாளிக்கவும் இப்படி ஒரு திட்டத்தினை கொண்டு வந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.