முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, தான் ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தில் அடுத்த வாரிசு கணக்காக வளர்ந்து வருகிறது.
கடந்த மார்ச் 2020-ல் ரிலையன்ஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 867 ரூபாய் வரை சரிந்தது.
அடுத்த சில மாதங்களுக்குள் 2,198 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது என்றால், அதற்கு முழு முதல் காரணம் ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை விற்று சுமாராக 20 பில்லியன் டாலரைத் திரட்டியது தான். அப்படிப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியாயின.
ஜூன் 2020 காலாண்டு முடிவுகள்
இந்த ஜூன் 2020 காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் நிகர லாபம் 2,520 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஜூன் 2019-ல் ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் வெறும் 891 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக ஜியோவின் லாபம், 183 சதவிகிதம் லாபம் எகிறி இருக்கிறது.
33 % ஏற்றம் கண்ட வருவாய்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருவாய், கடந்த ஜூன் 2019 காலாண்டில் 12,383 கோடி ரூபாயாகத் தான் இருந்தது. ஆனால் இந்த ஏப்ரல் 2020 - ஜூன் 2020 காலாண்டில் 16,557 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. ஆக 33.7 % வருவாய் ஏற்றம் கண்டு இருக்கிறது.
வாடிக்கையாளர்கள்
முகேஷ் அம்பானியின் செல்லமான ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மார்ச் 2020 முடிவில் 388 மில்லியன் பேராக (38.8 கோடி வாடிக்கையாளர்கள்) இருந்தது. தற்போது 30 ஜூன் 2020 கணக்குப் படி 398.3 மில்லியனாக (39.83 கோடி) அதிகரித்து இருக்கிறதாம்.
ARPU வருவாய் அதிகரிப்பு
இதை எல்லாம் விட மிக முக்கியமாக ஒரு வாடிக்கையாளர் மூலம் ஜியோ கம்பெனி ஈட்டும் வருவாய் (Average Revenue Per User - ARPU) 7.5 சதவிகிதம் அதிகரித்து 140.3 ரூபாயாக இருக்கிறதாம். இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகப் பார்க்கிறார்கள் டெலிகாம் அனலிஸ்ட்கள்.
பயன்பாடு அதிகரிப்பு
இந்த ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையான கால கட்டத்தில், ஒரு வாடிக்கையாளர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 12.1 ஜிபி டேட்டா பயன்படுத்துகிறாராம். அதே போல ஒரு மாதத்தில் சராசரியாக ஒரு வாடிக்கையாளர் 756 நிமிடம் போனில் பேசுகிறாராம். இந்த பயன்பாடு அதிகரிப்பினால் தான் இந்த காலாண்டில் எல்லாமே அதிகரித்து இருக்கிறது என்கிறது நிறுவன தரப்பு.
ஒரு வருத்தம்
இத்தனை பாசிட்டிவாக ரிலையன்ஸ் ஜியோவின் காலாண்டு முடிவுகள் வெளியான போதும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை ஏற்றம் காணவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, இறக்கத்தில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது என வருத்தப்படுகிறார்கள் ரிலையன்ஸ் கம்பெனியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள்.