கடந்த 2016-ம் ஆண்டு தன் வலது காலை எடுத்து வைத்து இந்திய டெலிகாம் நிறுவனத்துக்குள் நுழைந்தது ரிலையன்ஸ் ஜியோ.
ஏற்கனவே தன் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டு நல்ல வியாபாரம் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆப்படிக்கத் தொடங்கியது ஜியோ.
எங்கும் மலிவு, எதிலும் மலிவு. இலவச வாய்ஸ் கால்கள். ஒரு ஜிபி டேட்டா 150 ரூபாய்க்கு விற்றது போய், 1ஜி டேட்டா 5 ரூபாய்க்கு கிடைத்தது என்றால் அதற்கு முழு முதல் காரணம் ரிலையன்ஸ் ஜியோ தான்.
விலை ஏற்றம்
சமீபத்தில் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் வெளியான போதே, ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்கள் டெலிகாம் சேவைத் திட்டங்களுக்கான விலையை அதிகரிக்கத் திட்டமிட்டார்கள். திட்டமிட்டது போலவே அடுத்த சில வாரங்களில் திட்டங்களின் விலையை சுமார் 40 சதவிகிதம் வரை அதிகரித்துவிட்டார்கள்.
திட்டம் ரத்து
ரிலையன்ஸ் ஜியோ ஃபோன் ரீசார்ஜ் திட்டங்களில் 49 ரூபாய்க்கு ஒரு திட்டம் இருந்தது. அந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் ஒரு ஜிபி 4ஜி டேட்டா, 50 எஸ் எம் எஸ் மற்றும் அன்லிமிடெட் ஜியோ டூ ஜியோ வாய்ஸ் கால்கள் என 28 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இது தான் ஏழைகளுக்கான எல் உருண்டை. இப்போது இந்த திட்டத்தையே நீக்கிவிட்டது ஜியோ.
அடுத்த திட்டம்
இப்போது ஜியோ ஃபோன் ரீசார்ஜ் திட்டங்களில் 75 ரூபாய் திட்டம் தான் இருப்பதிலேயே குறைந்த விலைத் திட்டம். அந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 3 ஜிபி 4ஜி டேட்டா, 50 எஸ் எம் எஸ் மற்றும் அன்லிமிடெட் ஜியோ டூ ஜியோ வாய்ஸ் கால்கள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 500 நிமிடங்கள் என 28 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
50 சதவிகிதம்
ஆக ஜியோ ஃபோன் வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால், குறிப்பாக 49 ரூபாய் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் முடியாது. சுமார் 53 சதவிகிதம் கூடுதலாக செலவழித்து 75 ரூபாய் திட்டத்தைத் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது.
பேசவில்லை
ஏன் ஜியோ ஃபோன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் 49 ரூபாய் திட்டத்தை நீக்கினார்கள் என, இதுவரை எந்த ஒரு தகவலும் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து வெளியாகவில்லையாம். ஆனால் இந்த 49 ரூபாய் திட்டம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு கட்டுப்படி ஆகவில்லை என்று செய்திகள் புரளிகளாக பரவி வருகின்றன.
சுய ரூபம்
இத்தனை நாட்கள், இலவசம் மலிவு விலை, குறைந்த விலையில் நிறைய சேவைகள், நிறைய டேட்டாக்கள் என ஜமாயித்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், இனி ரிலையன்ஸ் ஜியோ வசூலிக்கும் கூடுதல் தொகையைக் கொடுத்து வாய்ஸ் கால் மற்றும் டேட்டா திட்டங்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னும் எத்தனை திட்டங்களில் இப்படி கூடுதல் விலை வசூலிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.