அனில் அம்பானிக்கு கடந்த சில வருடங்களாக எல்லாத் தொழில்களிலும் தோல்வி, நஷ்டம், சரிவு தான். இதில் அனில் அம்பானி மட்டுமல்ல அவர் தலைமை வகிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 11 வாரத்தில் 10 மடங்கு வளர்ச்சி அடைந்து பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி வளர்ச்சியை மக்களால் மட்டுமல்ல அனில் அம்பானியாலே நம்ப முடியலையாம். எப்படி எந்த நிறுவனத்தின் பங்குகள் ராக்கெட் வளர்ச்சியைக் கண்டுள்ளது..? வாங்கப் பார்ப்போம்..!!
அனில் அம்பானி
ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய மாபெரும் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் ஓரே தம்பி தான் அனில் அம்பானி.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திருபாய் அம்பானி-யின் மறைவிற்குப் பின் ரிலையன்ஸ் இரண்டாக உடைந்தது. அதில் ஒரு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மற்றொன்று அனில் அம்பானியின் திருபாய் அம்பானி குரூப்.
வளர்ச்சி
திருபாய் அம்பானி-யின் மறைவிற்குப் பின் அவரது மனைவி கோகிலாபென் அம்பானி இரு மகன்களுக்குச் சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்தார். அப்படி 2006ஆம் ஆண்டு அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குரூப் என்கிற திருபாய் அம்பானி குரூப் உருவானது.
சொத்து பிரிவின் போது கிட்டத்தட்ட இரு மகன்களுக்கும் அப்போதைய காலகட்ட மதிப்பின் படி ஓரே மதிப்பிலான வர்த்தகத்தைத் தான் பிரிக்கப்பட்டது. ஆனால் தற்போது முகேஷ் அம்பாநி பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அனில் அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
கைகொடுத்த ரிலையன்ஸ் நேவல்..
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அனில் அம்பானி தலைமை விகிக்கும் ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட் காலாண்டு முடிவுகளில் நஷ்டத்தைச் சந்தித்தும் 11 வாரத்தில் 1000 சதவீதம் அதாவது 10 மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வளர்ச்சி
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவன பங்குகள் வெறும் 0.95 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று 7.60 ரூபாய்க்கு வர்த்தகம் செய்து அசத்தி வருகிறது.
கடந்த 11 வாரத்தில் இந்நிறுவனத்தின் 5 சதவீத அப்பர் சர்கியூட் அளவீட்டை சுமார் 51 முறை அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 45 சதவீதம் வரையில் சரிவடைந்த நிலையில் சுமார் 1000 சதவீத வளர்ச்சியைக் கடந்த 11 வாரத்தில் பதிவு செய்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
2018-19ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 184.63 கோடி ரூபாய் அளவிலான வருவாய்ப் பெற்றது, இதேபோல் இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் 10,481.04 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.