மத்திய ரிசர்வ் வங்கியின் துணை நிலை ஆளுநர் என் எஸ் விஸ்வநாதன் வரும் மார்ச் 31, 2020 அன்றே ஓய்வு பெற இருப்பதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இவர் ராஜினாமா கடிதத்தை ஆர்பிஐ ஏற்றுக் கொண்டதாம். ஆனால் கேபினெட்டும் இவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறதாம்.
என் எஸ் விஸ்வநாதன்-க்கு வரும் ஜூலை 03, 2020 வரை பதவிக் காலம் இருக்கிறதாம். ஆனால் உடல் நிலை சரி இல்லாததால் மூன்று மாதம் முன் கூட்டியே பதவியில் இருந்து விலகுகிறாராம்.
கடந்த ஜூலை 2019-ல் இவர் பணிக்காலம் முடிந்த பின்பும், கேபினெட் அப்பாயிண்ட் கமிட்டி, இவருக்கு ஒரு ஆண்டு காலம் நீட்டிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. என் எஸ் விஸ்வநாதன் அவர்களின் ஓய்வு காலம் குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் யோகேஷ் தயாள் எந்த ஒரு கருத்தையும் கூற மறுத்து இருக்கிறார்.
மத்திய ரிசர்வ் வங்கியிலேயே, என் எஸ் விஸ்வநாதன் தான் மிக மூத்த துணை ஆளுநராம். இவர் வரும் ஏப்ரல் 2020 மாத கடைசியில் ஓய்வு பெறுவதாக இருந்தாராம். ஆனால் உடல் நிலை ஒத்துழைக்காததால், மார்ச் 31-ம் தேதியே ஓய்வு பெற இருக்கிறாராம்.
62 வயது என் எஸ் விஸ்வநாதன், பல முக்கிய பதவிகளை வகித்து இருக்கிறாராம். அதனால் தான் மத்திய அரசு இவருக்கு ஒரு வருட பணி நீட்டிப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 28, 2016-ல் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி ஏற்றவர், ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், சக்தி காந்த தாஸ் என மூன்று ஆர்பிஐ ஆளுநர்களுடன் பணியாற்றி இருக்கிறார் என்பதை அடிக் கோடு போட்டுச் சொல்கிறார்கள். என் எஸ் விஸ்வநாதன் ஆர் பி ஐ துணை ஆளுநர் ஆவதற்கு முன், ஆர்பிஐ வங்கியின் செயல் இயக்குநராக இருந்தார் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
1981-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கியில் பணிக்குச் சேர்ந்த என் எஸ் விஸ்வநாதன், பல முக்கிய பதவிகளில் பணியாற்றி இருக்கிறார். இவர் பெங்களூரூ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பொருளாதாரம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஆர்பிஐ தரப்பில் இருந்து இவரின் ராஜினாமா உறுதி செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.