ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை முடிவுகளை இன்று சக்திகாந்த தாஸ் சரியாக 10 மணிக்கு வெளியிட்டார். இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை அடையாத நிலையில், நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றத்தையும் செய்யாமல் இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் கடன், வைப்பு நிதி, கார்ப்ரேட் கடன், MSME கடனின் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இதனால் மக்களுக்கு கூடுதலான சுமை ஏற்படாது.
வட்டி விகிதங்கள்
இன்று ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதமாகவும் தொடரும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் 9 நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான வட்டி விகித மாற்றமும் செய்யவில்லை.
இருமாத நாணய கொள்கை கூட்டம்
ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்ய வேண்டாம் என 6 பேரில் 5 பேர் வாக்கு அளித்துள்ளனர். இதன் மூலம் ரெப்போ விகிதத்தைத் தொடர்ந்து 4 சதவீதமாக வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட ரிவர்ஸ் ரெப்போ விகிதம் இன்று உயர்த்தப்படவில்லை.
பொருளாதார வளர்ச்சி
ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவீட்டை வெளியிட்டு உள்ளார். நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்திய பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜிடிபி கணிப்புகள்
மேலும் பொருளாதார வளர்ச்சி அளவீடுகளில் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 6.6 சதவீதமும், 4வது காலாண்டில் 6.4 சதவீதமும், 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 17.2 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 7.8 சதவீதமாக வளர்ச்சி அடையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 6.6 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
CPI கணிப்புகள்
இதேபோல் சில்லறை விலை பணவீக்கத்தில் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 5.1 சதவீதமும், 4வது காலாண்டில் 5.7 சதவீதமும், 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 5 சதவீதமாக வளர்ச்சி அடையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 4.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி முன்பு கணித்திருந்தது தற்போது இதன் அளவு உயர்ந்துள்ளது.
VRRR ஏலம்
ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளில் இருக்கும் கூடுதலான பணப்புழக்கத்தை VRRR வாயிலாக டிசம்பர் 17ஆம் தேதி நடக்கும் ஏலத்தின் வாயிலாக 6.5 லட்சம் கோடி ரூபாயும், டிசம்பர் 31ஆம் தேதி நடக்கும் ஏலத்தின் வாயிலாக 7.5 லட்சம் கோடி ரூபாயும் எடுக்க உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2022க்கு பின் VRRR ஏலம் தான் பணபுழக்கத்தை குறைக்க முக்கிய கருவியாக இருக்க போகிறது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.