முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தனது வருடாந்திர கூட்டத்தில் எனர்ஜி துறையில் சுமார் 75,000 கோடி ரூபாய் முதலீட்டில் 4 புதிய தொழிற்சாலைகளைத் துவக்க உள்ளதாக அறிவித்தார். இத்திட்டத்தின் முதல் படியாக 4 புதிய நிறுவனத்தைச் சில வாரங்களுக்கு முன்பு துவங்கி தனது வாரிசுகளை நிர்வாகத் தலைவராக நியமித்தார்.
இந்நிலையில் கிரீன் எனர்ஜி துறையில் குறுகிய காலகட்டத்தில் அதிகளவிலான வர்த்தகம் வருவாய் பெற தற்போது அதிகளவிலான வாய்ப்புகள் உருவாகியுள்ளதை அடுத்து முகேஷ் அம்பானி இத்துறையில் இறங்க முடிவு செய்துள்ளார்.
ரீடைல், டெலிகாம் துறையில் செய்தது போலவே கிரீன் எனர்ஜி துறையிலும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றுவதன் மூலம் தனது வர்த்தகத்தைக் குறைந்த காலகட்டத்திலேயே பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை ஃபாலோ செய்யத் துவங்கியுள்ளார்.
ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாக அமெரிக்காவில் எனர்ஜி ஸ்டோரேஜ் துறையில் இயங்கும் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான அம்பிரி (Ambri) நிறுவனத்தில் பில் கேட்ஸ், பால்சன் அண்ட் கோ மற்றும் இதர சில முதலீட்டாளர்கள் உடன் இணைந்து ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் சுமார் 144 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
உலக நாடுகளுக்கு விரிவாக்கம்
இந்த முதலீடு ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் நிறுவனத்தின் எனர்ஜி வர்த்தகத்தை நீண்ட கால அடிப்படையில் உலக நாடுகளுக்குக் கொண்டு செல்ல பெரிய அளவில் உதவும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அம்பிரி நிறுவனத்தில் முதலீடு
மேலும் அமெரிக்காவில் இருக்கும் மாசசூசெட்ஸ் பகுதியில் இருக்கும் அம்பிரி (Ambri) நிறுவனத்தில் பலர் முதலீடு செய்துள்ள வேளையில் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் நிறுவனம் 50 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்து சுமார் 42.3 மில்லியன் பங்குகளைப் பெற்றுள்ளது. அம்பிரி நிறுவனத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்.. வாங்க பார்ப்போம்.
பேட்டரி தொழில்நுட்பம்
அம்பிரி நிறுவனம் உருவாக்கியுள்ள பேட்டரி நீண்ட நேரம் எனர்ஜியை சேமிக்கும் வல்லமை கொண்டது. இந்தப் பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் வடிவத்திற்கு அம்பிரி காப்புரிமை பெற்றுள்ளது. லித்திம் ஐயன் பேட்டரியை கிரிட் ஸ்கேல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் காரணத்தால் தயாரிப்புச் செலவு குறைந்து, பாதுகாப்பு அதிகரித்து, நீண்ட நேரம் பேட்டரியை பயன்படுத்தும் திறன் கொண்டதாக உள்ளது.
இந்தியாவில் கூட்டணி தொழிற்சாலை
இப்புதிய முதலீட்டின் மூலம் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் அம்பிரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பேட்டரியை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கப் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது. இது சாத்தியமானால் ரிலையன்ஸ் கிரீன் எனர்ஜி திட்டத்தில் புதிய மைல்கல் ஆக இருக்கும்.
குறைந்த செலவில் பேட்டரி
மேலும் அம்பிரி நிறுவனத்தின் பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் 10MWh முதல் 2GWh மின்சாரத் தேவை கொண்ட திட்டங்களுக்குப் பேட்டரியை தயாரிக்க முடியும் என்பதால் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தனது கிரீன் எனர்ஜி திட்டத்தை மிகவும் குறைந்த செலவில் செய்து முடிக்க முடியும். அவை அனைத்தையும் தாண்டி லித்தியம் ஐயன் பேட்டரி என்பதால் விலையும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 வருடம் எந்தப் பிரச்சனையும் இல்லை
அம்பிரி தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்படும் பேட்டரிகள் சுமார் 20 வருடம் எவ்விதமான செயல்திறன் குறைபாடு இல்லாமல் இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது எனக் கூறப்படுகிறது. இந்தப் பேட்டரிகள் high-usage applications பிரிவில் பயன்படுத்தக் கூடியவை எனவும் கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் கிரீன் எனர்ஜி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சில மாதங்களுக்கு முன்பு நடத்திய வருடாந்திர கூட்டத்தில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் ஜாம்நகர் பகுதியில் ஏற்கனவே இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகில், புதிதாகத் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் என்ற கிரீன் எனர்ஜி-க்கான தளத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்தார் முகேஷ் அம்பானி.
ரூ.60,000 கோடி முதலீடு
இப்புதிய திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் தளத்தில் சுமார் 4 தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு முதற்கட்டமாகச் சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய எனர்ஜி வர்த்தகத்தைத் துவங்க முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
4 புதிய தொழிற்சாலைகள்
முதல் தொழிற்சாலை: சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலை
இரண்டாவது தொழிற்சாலை: எலக்ட்ரிக் கார் முதல் அனைத்து பயன்பாட்டிற்கு மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரி தொழிற்சாலை
மூன்றாவது தொழிற்சாலை: பசுமை ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்யப் புதிய Electrolyser factory
நான்காவது தொழிற்சாலை: ஹைட்ரஜன் வாயுவை கார்களில் எரிபொருளாகப் பயன்படுத்தும் Fuel cell தயாரிக்கும் தொழிற்சாலை
கிரீன் எனர்ஜி பிரிவில் 7 புதிய நிறுவனங்கள்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி வர்த்தகத்திற்காக மட்டும் ஜூன் மாதத்திலிருந்து புதிதாக 7 நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.
Reliance New Energy Solar
Reliance New Solar Energy
Reliance New Energy Storage
Reliance Solar Projects
Reliance Storage
Reliance New Energy Carbon Fibre
Reliance New Energy Hydrogen Electrolysis
இந்த 7 நிறுவனத்திற்கும் தலா 3 தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார், அனைத்து நிறுவனத்திலும் முகேஷ் அம்பானி வாரிசுகளான அகாஷ் அம்பானி, அனந்த் அம்பான், ஈஷா அம்பானி ஆகியோரில் ஒருவர் உள்ளனர். மேலும் அனைத்து நிறுவனங்களிலும் தலைவராக இருப்பது ஷங்கர் நட்ராஜன்.
Bernstein கணிப்பு: 36 பில்லியன் டாலர் வர்த்தகம்
இதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் வெளியான ஒரு ஆய்வில் தரகு சேவை நிறுவனமான Bernstein, அடுத்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் சுமார் 36 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைக் கிரீன் எனர்ஜி வர்த்தகப் பிரிவில் மட்டும் உருவாக்க உள்ளதாகக் கணித்தது. இது இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.