இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வர்த்தக விரிவாக்க பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகளவில் வருமானத்தைத் தரும் தனது எண்ணெய் வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதல் முறையாக முதலீடு செய்ய வாய்ப்புக் கொடுத்தது மொத்த வர்த்தகச் சந்தையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி அபுதாபி நகருக்கு அருகில் இருக்கும் ரூவைய்ஸ் என்னும் இடத்தில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
கலக்கல் கூட்டணி
இந்தியாவின் மாபெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான Adnoc ஆகிய நிறுவனங்கள் இணைந்து Ruwais என்னும் இடத்தில் பிவிசி-யின் மூலப்பொருளான Ethylene Dichloride தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளது.
அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் என்பது ஐக்கிய அரபு நாடுகளின் அரசு நிறுவனமாகும்.
Adnoc நிறுவனம்
ரிலையன்ஸ் மற்றும் Adnoc நிறுவன கூட்டணி ஒப்பந்தம் மூலம் Ruwais பகுதியில் இருக்கும் Adnoc சுத்திகரிப்புல மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைக்கு அருகிலேயே இப்புதிய Ethylene Dichloride தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ஆலோசனை செய்யப்பட உள்ளது. அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என இரு தரப்பும் தெரிவித்துள்ளது.
Adnoc, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடனான இந்தக் கூட்டணி தனது பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தை மேம்படுத்தவும் விரிவாக்கம் செய்யவும் முடியும் என நம்புகிறது.
கச்சா எண்ணெய்
இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவில் 6 சதவீதம் ஐக்கிய அரபு நாடுகள் விநியோகம் செய்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு 3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய். அதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் உடன் கூட்டணி சேர்ந்துள்ள அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான Adnoc உலகிலேயே 12வது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
இந்த OPEC அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக முறை
தற்போதைய ஒப்பந்தத்தின் படி இக்கூட்டணி தொழிற்சாலைக்கு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான Adnoc, ethylene விநியோகம் செய்யும், இத்தொழிற்சாலையை ரிலையன்ஸ் நிர்வாகம் செய்து தயாரிப்பு பொருட்களை இந்தியச் சந்தைக்குள் கொண்டு வருவதே திட்டம். இந்த வர்த்தகத்தின் மூலம் Adnoc நிறுவனமும் இந்தியச் சந்தையில் நேரடியாக இறங்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் Adnoc நிறுவனமும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திட்டம் வெற்றிகரமாக நடந்தால் அடுத்தடுத்த முதலீடுகள் இந்தியாவில் குவிய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.