தற்போதைய நிலையில் இந்திய தொலைத் தொடர்பு துறையில், தனக்கென தனி இடம் வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறைந்த காலத்தில் கணிசமான வளர்ச்சியினை பெற்றுள்ளது எனலாம்.
இந்த நிறுவனம் கணிசமான வளர்ச்சியினைக் கண்டு வந்தாலும், அண்டை நாடுகளில் உள்ளது போல இன்னும் 5ஜி சேவையினை இன்னும் கொண்டு வரவில்லை.
அதோடு இந்த நிறுவனம் கணிசமான அளவு கடனையும் கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே கடனை அடைக்கவும், நிறுவனத்தினை விரிவுபடுத்தவும் நிதியினை திரட்டி வருகிறது.
முதலீடு திரட்டல்
கடந்த ஆண்டிலேயே அதிகளவிலான முதலீடுகளை ஈர்த்து, தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தினை கடன் இல்லா நிறுவனமாக மாற்றப்போவதாக தெரிவித்து இருந்தார் முகேஷ் அம்பானி. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிதாபியின் அபிதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி ரிலையன்ஸ் ஜியோவில் 5,683.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.16 சதவீதம் பங்கினை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியது.
உச்சம் தொட்ட பங்கு விலை
இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 52 வார உச்சத்தினை எட்டியுள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஏழாவது முதலீடாகும். இது கடனை தீர்க்க உதவும் வகையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு 97,885.65 கோடி ரூபாய் முதலீடுகளை சில மாதங்களில் ஈர்த்துள்ளது.
ரிலையன்ஸ் பங்கு விலை
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது 2.78 சதவீதம் அதிகரித்து, இந்த ஆண்டில் அதிகபட்சமாக 1624 ரூபாயினை எட்டியுள்ளது. இது முந்தைய சந்தை முடிவு விலை 1580.60 கோடி ரூபாயாக முடிவடைந்துள்ளது. இந்த லார்ஜ் கேப் பங்கின் 52 வார குறைந்தபட்ச விலையானது மார்ச் 23, 2020 அன்று 867 ரூபாயினை எட்டியது. இந்த நிலையில் தற்போது, பிஎஸ்இயில் 87.31% அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.
நிஃப்டியில் ஏற்றம்
இதே நிஃப்டியில் முந்தைய பங்கு முடிவு விலையுடன் ஒப்பிடும்போது 2.71% அதிகரித்து 1618 ரூபாயாக இருந்தது. கடந்த ஞாயிற்கு கிழமையன்று புதிய முதலீட்டினை அறிவித்த நிலையில், ஜியோவின் 4.91 லட்சம் கோடி ரூபாயாக உள்ள பங்கின் மதிப்பு, 5.16 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
யாரெல்லாம் முதலீடு
இதற்கு முன்பாக பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டீஸ் பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கேகேஆர் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது மேற்கொண்டு அபிதாபி நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் உரிமை பங்கு வெளியீடு மூலமும் சுமார் 84,000 கோடி ரூபாயினை திரட்டியுள்ளது நினைக்கூறத்தக்கது.