பிரிட்டன் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சென்று வரும் நிலையில், பணவீக்க உயர்வால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக எனர்ஜி மீதான விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டன் பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நடுத்தர மக்களுக்குச் சாதகமாக முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
பிரிட்டன் அமைச்சகத்தில் இருந்த சர் கவின் வில்லியம்சன் அவர் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த நிலையில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதிமாக ஒரு முடிவை எடுத்துள்ளார் ரிஷி சுனக்.
பிரதமர் ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் ஆகியோரால் வெளியிடப்பட்ட புதிய திட்டங்களை வகுத்து வருகிறார், இப்புதிய திட்டங்களின் படி ஏறக்குறைய 2,50,000 பேருக்கும் அதிகமான பிரிட்டன் நாட்டின் குடிமக்கள் அதிக வருமான வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ரிஷி சுனக் மற்றும் ஜெர்மி ஹன்ட்
ரிஷி சுனக் மற்றும் ஜெர்மி ஹன்ட் புதிய திட்டத்தின் படி கிட்டத்தட்ட 246,000 பேர் உயர் வரி விகிதத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று மூர் கிங்ஸ்டன் ஸ்மித் என்ற தணிக்கை அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
45 சதவீத வருமான வரி
புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பிரிட்டன் நாட்டின் நிலையை மேம்படுத்த இருவரும் இணைந்து 45 சதவீத வருமான வரி விகித வரம்பை 150,000 பவுண்டு அளவில் இருந்து 125,000 பவுண்ட் ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
பிரிட்டன் வருமான வரி
பிரிட்டன் நாட்டில் 12,570 பவுண்ட் வரையிலான வருடாந்திர வருமானம் கொண்டவர்கள் 0 சதவீதம் வருமான வரியும், 12571 பவுண்ட் - 50270 பவுண்ட் வரையிலான ஆண்டு வருமானத்தைக் கொண்டவர்களுக்கு 20 சதவீத வரியும், அதிகப்படியாக 50,271 முதல் 150,000 பவுண்ட் வரையிலான வருமானத்தைக் கொண்டவர்களுக்கு 40 சதவீத வரியும், கூடுதல் வரியாக 150000 பவுண்ட் வருமானத்தைக் கொண்டவர்களுக்கு 45 சதவீத வரி விதிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் அறிவிப்பு
இதற்கான அறிவிப்பு இலையுதிர் கால அறிக்கையின் போது அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் டெலிகிராப் பத்திரிக்கை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் புதிய திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது.
1.3 பில்லியன் புவுண்டு
இந்தப் புதிய திட்டத்தின் மூலம், பிரிட்டன் அரசு ஆண்டுதோறும் சுமார் 1.3 பில்லியன் புவுண்டு அளவிலான தொகையை வரியாக வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. வரிகளை அதிகரிப்பதன் மூலமும் செலவினங்களைக் குறைப்பதன் மூலமும் அந்நாட்டின் 60 பில்லியன் பவுண்ட் அளவிலான நிதி பற்றாக்குறையின் பாதிப்பை மூட முயல்கிறது.
கூடுதல் வரி
இந்த மாற்றம் மூலம் ஒரு தனிநபர் வருடத்திற்கு 580 பவுண்ட் அளவிலான வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே 45 சதவீத வருமான வரி செலுத்தும் 629000 பேரின் வரி வருடத்திற்குச் சராசரியாக 1250 பவுண்ட் வரையில் அதிகரிக்க உள்ளது.
பொதுத்துறை ஊழியர்கள்
இதேவேளையில் பிரிட்டன் நாட்டின் பொதுத்துறை ஊழியர்கள் சம்பளம் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உயரும் நிலை தான் உள்ளது. மேலும் செவிலியர் மற்றும் காவல் அதிகாரிகளின் சம்பளம் குறையவும் வாய்ப்புகள் உள்ளது.
வருமான வரி
பிரிட்டன் பொருளாதாரம் தற்போது இருக்கும் சூழ்நிலையில் நீண்ட கால நோக்கில் வரிக் குறைப்புகளுக்குத் தயாராக இருப்பதாகவும், குறுகிய கால வரிக் குறைப்புகளுக்கு வாய்ப்பு இல்லை என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
நீண்ட காலத் திட்டம்
நீண்ட கால நிலையான வளர்ச்சியை அடைவதற்கு, நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார், இதைச் சாத்தியமாக்க தற்போது வரியை உயர்த்துவது தவிர வேறு வழி இல்லை எனத் தெரிவித்தார்.
லிஸ் ட்ரெஸ்
லிஸ் ட்ரெஸ் ஆட்சி காலத்தில் இந்த 45P வரி விதிப்பை மொத்தமாக நீக்குவதாக தனது மினி பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தார், இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தை, பத்திர சந்தை ஆகியவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் வாயிலாகவே லிஸ் ட்ரெஸ் பதவி விலகினார்.