பிரிட்டன் நாட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரிஷி சுனக் புதன்கிழமை தனது அரசு சில "மிகக் கடினமான முடிவுகளை" எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக எச்சரித்தார்.
அதேவேளையில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் போது கருணையுடன் செயல்படுவேன் என்று பிரிட்டன் மக்களுக்கு உறுதியளித்து உள்ளார்.
ரிஷி சுனக் மக்களால் பிரதமராக தேர்வு செய்யப்படவில்லை, தற்போது ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியிலான வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் பிரதமரானது அந்நாட்டு மக்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அந்நாட்டின் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து மீட்டு எடுக்கக் கட்டாயம் ரிஷி சுனக் தேவை என்பது தான் நிதர்சனமான உண்மை.
ரிஷி சுனக்
இந்திய வம்சாவளி-யை சேர்ந்த ரிஷி சுனக் செவ்வாய்க்கிழமை பிரதமராகப் பதவியேற்ற நிலையில், முன்னாள் பிரதமரான லிஸ் ட்ரஸ் செய்த தவறுகளைச் சரி செய்ய உறுதி அளித்துள்ளார். இதேபோல் லிஸ் ட்ரஸ் பிரிட்டன் அரசின் நிதியில் பெரிய ஓட்டையை உருவாக்கி, பிரிட்டன் முதலீட்டுச் சந்தையைத் தடுமாறச் செய்தது மறக்க முடியாது.
3 பிரதமர்கள்
பிரிட்டன் மக்கள் கடந்த 7 வாரத்தில் 3 பிரதமர்களைப் பார்த்துள்ளனர், உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடக்காத வகையில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்திருப்பது பிரிட்டன் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரிஷி சுனக் டிவீட்
முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பின் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் செய்த டிவீட்டில், இன்று காலை நான் அமைச்சரவையில் நாங்கள் செய்ய உள்ள மகத்தான பணிகளைப் பட்டியலிட்டு, இந்த அரசாங்கம் கட்டாயம் சவாலை எதிர்கொண்டு இங்கிலாந்து நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புவோம் என்றும், நாங்கள் செய்யும் பணிகள் மூலம் பிரிட்டிஷ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான நேரம் இது என்றும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடினமான முடிவுகள்
பிரிட்டன் நாட்டின் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய பிரதமருமான ரிஷி சுனக், அரசாங்கம் மிகக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். இதேவேளையில் அரசு இரக்கத்துடன் செயல்பட்டு, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பாற்றும். தொடர்ந்து நீண்ட கால வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
பட்ஜெட் ஒத்திவைப்பு
இதேவேளையில் ரிஷி சுனக் தலைமையிலான இங்கிலாந்து அரசு அதன் பட்ஜெட் திட்டத்தை வெளியிடுவதை இரண்டு வாரங்களுக்கும் ஒத்திவைத்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆய்வு செய்து கடினமான தேர்வுகளைச் செய்யக் கூடுதலான நேரம் தேவை என்பதால் சுனக் பட்ஜெட் தாக்கலை ஒத்திவைத்துள்ளார்.
ஜெர்மி ஹன்ட்
லிஸ் ட்ரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ஜெர்மி ஹன்ட், ரிஷி சுனக் ஆட்சியிலும் தொடர்ந்து நிதியமைச்சராகப் பதவி வகிக்கிறார், முதல் கூட்டத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை தான் மற்ற அனைத்து கொள்கைகளுக்கும் அடித்தளமாக இருக்கும் என்று ஜெரமி ஹன்ட் வலியுறுத்தியுள்ளார்.
மினி பட்ஜெட் தோல்வி
டிஸ் ட்ரஸ்-ன் மினி பட்ஜெட் தோல்வியைத் தொடர்ந்து அவரது ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்-ஐ பதிவியில் இருந்து நீக்கிவிட்டு ஜெரமி ஹன்ட்-ஐ நியமித்தார். ஜெரமி ஹன்ட் பதவிக்கு வந்த உடன் 45 பில்லியன் டாலர் வரி வருவாய் இருக்கும் இரு முக்கியத் திட்டங்களை ரத்துச் செய்தார்.
ரிஷி சுனக் முக்கிய முடிவு
ஜெரமி ஹன்ட் இதற்கு முன்பு போரிஸ் ஜான்சன் ஆட்சியில் வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சராக இருந்தவர். இந்த நிலையில் ரிஷி சுனக் ஆட்சியில் நிதியமைச்சர் பதவி யாருக்கு என்ற கேள்வி முக்கியமானதாக இருந்த நிலையில் சுனக், ஜெரமி ஹன்ட் இப்பதவியில் தொடர முடிவு செய்தார்.
ஜேம்ஸ் கிளவர்லி
இதேபோல் பிரிட்டன் நாட்டின் வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டு உள்ள ஜேம்ஸ் கிளவர்லி ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் சர்வதேச சூழ்நிலை பிரிட்டன் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பாதிக்கும் என்பதைப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதைச் சமாளிக்கப் போதுமான கொள்கை மாற்றங்களும், பட்ஜெட் திட்டங்களும் அவசியம் எனப் பேசியுள்ளார்.
சுயெல்லா பிரேவர்மேன்
இவரைத் தொடர்ந்து லிஸ் ட்ரஸ் ஆட்சியில் உள்துறை செயலாளராக இருந்து ராஜினாமா செய்து வெளியேறிய இந்திய வம்சாவளி-யை சேர்ந்தவரான சுயெல்லா பிரேவர்மேன் மீண்டும் ரிஷி சுனக் ஆட்சியில் அதே உள்துறை செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
உள்துறை செயலாளர்
சுயெல்லா பிரேவர்மேன் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பது தற்போது முக்கியமான பணிகளில் ஒன்றாக உள்ளது எனப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். லிஸ் ட்ரஸ் ஆட்சியில் ஊழியர்கள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் காரணத்தால் விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் திட்டமிட்டு இருந்தார் இதைச் சுயெல்லா பிரேவர்மேன் தொடர்வாரா..?