எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் சொந்த தொழிலுக்கு ஈடாகாது என்றும், சொந்த தொழில் செய்த பலர் வெற்றி பெற்று கோடிகளை சம்பாதித்து உள்ளார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியுடன் சேர்ந்து தேன் வளர்ப்பு தொழிலை செய்து இன்று கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.
அவருடைய வெற்றி எப்படி சாத்தியம் ஆனது, அவர் தேன் தொழிலில் என்னென்ன சாதனை செய்தார் என்பதை தற்போது பார்ப்போம்.
ஹிமான்ஷு - தன்வி தம்பதி
மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக ஹிமான்ஷு என்பவர் வேலை பார்த்தார். அவரது மனைவி தன்வி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்குமே தாங்கள் செய்து வரும் வேலை போரடிக்க தொடங்கியதால் சொந்த தொழிலில் ஈடுபட முடிவு செய்தனர்.
சொந்த தொழில்
இதனையடுத்து அவர்கள் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினர். பாதுகாப்பற்ற பூச்சிக்கொல்லி உரங்களுக்கு பதிலாக மாற்று உரங்களை அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் தேனி வளர்ப்பு குறித்த தகவல் அவர்களுக்கு கிடைத்தது.
கிருஷி விக்யான் கேந்திரா
கிருஷி விக்யான் கேந்திரா என்ற அமைப்பிடம் இருந்து தேனி வளர்ப்பது எப்படி என்பது குறித்தும் தேனீ வளர்த்தால் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பது குறித்தும் ஹிமான்ஷு - தன்வி தம்பதி அறிந்து கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் கிரிஷி விக்யான் கேந்திராவின் அறிவுரையின்படி தேனீ வளர்க்க முடிவு செய்தனர்.
தேன் பண்ணை
தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஹிமான்ஷு - தன்வி தம்பதி தேன் பண்ணை அமைத்தனர். ஆரம்பத்தில் குறைவான அளவே தேன் தயாரித்த இந்த தம்பதிகள் படிப்படியாக தங்கள் தொழிலை வளர்த்து இன்று மிகப் பெரிய அளவில் தேன் தொழிலை செய்து வருகின்றனர்.
ரசாயன உரம்
இந்த தம்பதிகள் தேன் வளர்ப்பின் மூலம் அடுத்தடுத்து இலாபம் கிடைத்ததை அடுத்து தங்கள் தொழிலை மேம்படுத்தினர். ஆனால் ரசாயன உரங்களை இவர்களது தேன் பண்ணை அருகேயுள்ள விவசாயிகள் பயன்படுத்தியதால் அந்த விவசாயிகளின் செடிகளிலிருந்து எடுக்கப்படும் மகரந்தங்களால் தாங்கள் வளர்த்த தேனீக்கள் இறந்து போனதை அடுத்து அதிர்ச்சி அடைந்தனர்.
இயற்கை உரம்
இதனை அடுத்து தங்கள் தேன் பண்ணையின் பக்கத்திலிருந்த விவசாயிகளை ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் ஹிமான்ஷு - தன்வி தம்பதி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ரசாயன உரங்கள் காரணமாக தேனீக்கள் இறந்துவிட்டதால் 3 லட்சத்திற்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டாலும் இந்த தொழிலில் அவர்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறி அவர்களிடம் இருந்தது.
ரூ.1.4 கோடி லாபம்
ஹிமான்ஷு - தன்வி தம்பதிகளின் அறிவுரையை ஏற்று அருகிலிருந்த விவசாயிகள் ரசாயன உரத்தை நிறுத்திக் கொண்டதால் மீண்டும் தேன் தொழில் இந்த தம்பதிகளுக்கு சுறுசுறுப்பானது. இந்த தம்பதிகள் தற்போது ஒவ்வொரு மாதமும் சுமார் 300 கிலோ தேன் விற்பனை செய்து வருகின்றனர் என்றும் சராசரியாக ஒரு மாதத்திற்கு 9 லட்ச ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன்மூலம் இந்த தம்பதிக்கு ஆண்டுக்கு ரூ.1.4 கோடி ஒரு வருடத்திற்கு லாபம் கிடைப்பதாக தெரிகிறது.