இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் சுமார் 14,000 கோடி ரூபாய் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் தயாராகியுள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கியும், ஏசியன் டெவலப்மென்ட் வங்கியும் நிதியுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை மாநில அரசுகளுக்குக் கொடுத்து மத்திய அமைச்சகத்தின் கண்காணிப்பில் சாலை போக்குவரத்து பணிகளை நாடு முழுவதும் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இத்திட்டத்தை மிகவும் கடிப்பான மேற்பார்வையில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும். சாலை பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் விபத்துக்களை அதிகளவில் குறைக்கும் முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2018ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சாலை விபத்தில் சுமார் 1,50,000 பேர் இறந்துள்ளனர் என அரசு தரவுகள் கூறுகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்த 14,000 கோடி ரூபாய் நிதி திட்டம் பெரிய அளவில் உதவும். ஆனால் மத்திய மாநில அரசுகள் அதிகம் விபத்து நடக்கும் இடத்தைத் தேர்வு செய்து அந்த இடத்தில் தேவையான பாதுகாப்புப் பணிகளைச் செய்தால் சரியாக இருக்கும். ஆனால் எங்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது எனத் தெரியவில்லை.
மேலும் மாநில அரசு இத்திட்டத்தைச் சரியான முறையிலும், நேர்மையாகவும் செய்ய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்திற்கான நிதியைப் பகுதி பகுதியாக விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2018ஆம் ஆண்டுச் சாலை விபத்து மற்றும் சாலை விபத்தில் ஏற்பட்ட மரணம் குறித்துச் சுமார் 199 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில் இந்தியா தான் அதிக அளவிலான உயிர்களை இழந்துள்ளது என உலகச் சாலை புள்ளியியல் தரவுகள் கூறுகிறது.
இந்தியாவிற்கு அடுத்தபடியாகச் சீனா, அமெரிக்கா இருப்பது குறிப்பிடத்தக்கது, கிட்டத்தட்ட மொத்த சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியாவில் மட்டும் சும்ரா 11 சதவீதம் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது என 2018 WHO Global Report on Road Safety அறிக்கை கூறுகிறது.
இந்த ஆய்வுகள் மற்றும் தகவல்களின் படி தான் உலக வங்கியும், ஏசியன் டெவலப்மென்ட் வங்கியும் இந்தியாவின் சாலை பாதுகாப்பை மேம்படுத்த சுமார் 14,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.