உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் ஒரு சில வேலை வாய்ப்புகள் மட்டும் ஸ்பெஷலாக இருக்கும் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்.
சாதாரணமான வேலையாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய சம்பளம், மிகப்பெரிய வசதிகள் இருக்கும்.
இதுபோன்ற மிக அரிய வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு சிலர் மட்டுமே தெரிந்திருப்பார்கள். அந்த வகையில் 3.5 லட்ச ரூபாய் சம்பளம் ஹெலிகாப்டர் வசதி உள்பட பல்வேறு வசதிகள் கொண்ட ஒரு வேலை வாய்ப்பு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
3.5 லட்ச ரூபாய் சம்பளம்
ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட மூன்றரை லட்ச ரூபாய் சம்பளம், இலவச ஹெலிகாப்டர் மற்றும் படகு சவாரி வழங்கும் ஒரு வேலை உள்ளது என்பது பலருக்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கும். இந்த வேலை கடின உழைப்பு செய்ய வேண்டிய வேலையோ அல்லது மூளையை கசக்கி செய்ய வேண்டிய வேலையோ அல்ல. இந்த வேலை அறிய பறவைகளை பாதுகாப்பது ஒன்று மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிய வகை பறவைகள்
நியூசிலாந்து நாட்டின் அரிய பறவைகளை பாதுகாக்கும் அமைப்பு ஒன்று அரிய வகை பறவைகளை பேணி பாதுகாக்கும் மேற்பார்வையாளர் பதவிக்காக விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அரிய பறவை பாதுகாக்கும் வேலை என்று மட்டும் தெரிந்து கொண்ட பலர் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யவில்லை. முதல் நாள் வெறும் மூன்று பேர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ததாக தெரிகிறது. ஆனால் இந்த வேலைக்கு ரூ.3.50 லட்சம் சம்பளம் மற்றும் இலவச ஹெலிகாப்டர், படகு சவாரி ஆகியவை இருப்பது தெரிந்தவுடன் பலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்து உள்ளதாக தெரிகிறது.
விண்ணப்பம்
நியூசிலாந்து நாட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலிருந்தும் குறிப்பாக கொலம்பியா மற்றும் சுவீடன் ஆகிய பகுதிகளில் இருந்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் உள்ள தெற்கு மேற்கு கடற்கரையில் ஒரு சில அரியவகை உயிரினங்களை பாதுகாப்பதே இந்த வேலையின் முதன்மைப் பணியாகும். அதில் ஒன்று கிவி பறவை என்பது குறிப்பிடத்தக்கது.
பறவைகள்
அரிய வகை பறவைகளுக்கு பழம் உள்பட சாப்பாடு கொடுத்து அவற்றை கண்காணிக்க வேண்டும் என்பதுதான் இந்த வேலை. ஆனால் இந்த வேலையை செய்வதற்கு, இந்த பறவைகளை பார்வையிடுவதற்கு ஹெலிகாப்டர்களில் அல்லது படகுகளில் தான் செல்ல வேண்டும். 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் கொண்ட மலைத்தொடர்கள், கடற்கரைகள் உள்ளடக்கிய பகுதிகளில் தான் வேலை செய்ய வேண்டும்.
1400 விண்ணப்பங்கள்
கண்ணுக்கினிய அழகை இயற்கை காட்சிகளைப் பார்த்துக்கொண்டே அரியவகை உயிரினங்களை பாதுகாப்பதற்காக ஆண்டுக்கு சுமார் 42 லட்சம் ரூபாய் இந்த அமைப்பு சம்பளம் தருகிறது. இதுவரை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த வேலைக்கு 1400 விண்ணப்பங்கள் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வேலையை பெரும் அதிர்ஷ்டசாலிகள் யார் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.