புனே: மற்ற உலக நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மிக சிறப்பாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் இருந்தாலும், ரூபாய் மதிப்பு அந்தளவுக்கு பாதிக்கவில்லை. இதனை மத்திய ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
வரலாறு காணாத சரிவு
கடந்த சில தினங்களாகவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத சரிவினை எட்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக 81 ரூபாயினை தாண்டி வீழ்ச்சி கண்டுள்ளது. இது இன்னும் சரியலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் மத்திய வங்கியானது ஏற்கனவே வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இது மேற்கொண்டு சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் சிறப்பாக செயல்பாடு
மற்ற நாணய கரன்சிகளுடன் ஒப்பிடும்போது ரூபாய் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ரிசர்வ் வங்கி இந்த பதற்றமான நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. மற்ற நாணயங்களின் போக்கினையும் கவனித்து வருகின்றது. அமெரிக்க ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தியுள்ளது. இது மற்ற நாட்டு கரன்சிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் சரிவு தொடரலாம்
வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்ட பின்னர் டாலரின் மதிப்பு உச்சம் எட்டி வருகின்றது. பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதுவும் ரூபாய் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மேலும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் மேற்கொண்டு ரூபாயில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும் என தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.
இந்தியா பெட்டர்
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கையானது மேற்கொண்டு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. அதோடு தற்போதைய நிலையில் சர்வதேச அளவிலான வளர்ச்சியிலும் மெதுவாகவே காணப்படுகின்றது. ஆனால் அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பரவாயில்லை.
இந்தியாவின் வளர்ச்சி
இந்தியாவில் சமீபத்திய மாதங்களாக வரி வசூலும் அதிகரித்துள்ளது. கடன் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. தற்போதைய ஏற்ற இறக்கம் என்பது சற்று தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து தங்களது முதலீடுகளை செய்யலாம்.