ஐரோப்பாவுக்கு உக்ரைன் வழியாக செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை, ரஷ்யாவின் எரிபொருள் ஜாம்பவான் ஆன காஸ்ப்ரோம் நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போருக்கு இடையில், சர்வதேச அளவில் எரிபொருள் வணிகம் என்பது மிக மோசமான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவுக்கு உச்சம் எட்டியது.
பிரச்சனை யாருக்கு?
குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இது பெரும் பிரச்சனையாக அமைந்தது. ஒரு புறம் இறக்குமதி நாடுகள் வழக்கம்போல இறக்குமதி செய்து வந்தாலும், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தினால், இறக்குமதியினை துண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. எனினும் ஐரோப்பிய நாடுகள் அப்படியில்லை. ரஷ்யாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராகும்.
இயற்கை எரிபொருள்
ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்காக அதிகம் ரஷ்யாவினையே சார்ந்துள்ளன. இதனால் ரஷ்யாவுக்கு பிரச்சனை என்றாலும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு இது பெரும் அடியாகவே பார்க்கப்பட்டது.
சேமிப்பு போதாது?
குறிப்பாக குளிர் காலத்துக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவை, ரஷ்யா குறைத்ததால், நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. அதுமட்டும் அல்ல ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான எரிபொருள் சரியாக கிடைக்காததால், உற்பத்தியினை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சுற்றுசூழலுக்கும் பிரச்சனை
தொடர்ந்து 9 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரால் இன்னும், எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க போகின்றனவோ? இது ஒரு புறம் எனில் மறுபுறம் ஐரோப்பாவில் பருவ நிலை இலக்குகளை அடைவதற்கும் பிரச்சனை எழுந்துள்ளது. போதிய எரிபொருள் கிடைக்காத நிலையில், மீண்டும் நிறுவனங்கள் நிலக்கரியை நாடத் தொடங்கியுள்ளன. இது சுற்றுசூழலுக்கும் பிரச்சனையாக மாற வழிவகுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது தான் காரணமா?
இப்படியொரு நிலையில் ரஷ்யாவின் எனர்ஜி ஜாம்பவான் ஆன காஸ்ப்ரோம், ஐரோப்பாவுக்கு உக்ரைன் வழியாக செல்லும் பைப்லைன் எரிவாயு சப்ளையை நிறுத்த போவதாக தெரிவித்துள்ளது. மால்டோவா நவம்பர் மாதத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முழுத் தொகையையும் இன்னும் செலுத்தவில்லை என்றும், இதனால் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மாதம் 25 மில்லியன் கியூபிக் மீட்டர்ஸ் அளவுக்கு சப்ளை செய்துள்ளதாகவும், ஆனால் இதுவரையில் அதற்கான முழு கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
எதற்காக இந்த மிரட்டல்?
உக்ரைன் வழியாக செலுத்தும் எரிபொருள் சப்ளையை படிப்படியாக நிறுவனம் நிறுத்த உள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.
ரஷ்யா எரிபொருளை ஆயுதமாக பயன்படுத்துவது இது முதன் முறை அல்ல, இது பல முறை நடந்துள்ளது. சமீபத்திய தாக்குதலுக்கு மத்தியில் ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு இப்படி ஒரு மிரட்டலை விடுத்து வருவதாக ஐரோப்பிய தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ரஷ்யாவின் கருத்து என்ன?
ஆனால் ரஷ்யாவோ பராமரிப்பு மற்றும் சரியாக கட்டணம் செலுத்தாத நிலையில் தான் சப்ளையை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குளிர்காலத்தில் அதிகம் தேவைப்படும் இயற்கை எரிவாயுவும், வீடுகள் மற்றும் ஆலைகளில் அதிகம் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சப்ளையை ரஷ்யா குறைப்பதால் இது விலை அதிகரிப்பினையும் தூண்டுகின்றது. இது மேற்கொண்டு விலை தாக்கத்தினை ஏற்படுத்த வழிவகுக்கிறது.
தீர்மானம் வந்ததா?
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இயற்கை எரிவாயு விலை குறைந்தது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் அவற்றை வாங்கி சேமிக்க கூடிய வசதிகளை கொண்டிருக்கவில்லை. ஆக இது மால்டோவா உள்ளிட்ட நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பானது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என ஐரோப்பிய பாரளுமன்றம் பிரகனடபடுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் வந்துள்ளது.