உலகளவில் நிலவி வரும், மந்த நிலையில் மக்கள் மத்தியில் தேவையானது பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது. இதனால் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் அதன் தாக்கத்தினை உணர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக ஐடி துறை, நுகர்வோர் பொருட்கள், சில்லறை வணிகம், கல்வித் துறை, ஸ்டார்ட் அப் என பல துறைகளிலும் மந்த நிலை தொற்றிக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் தான் மேற்கண்ட பல துறை சார்ந்த நிறுவனங்கள் பலவும் செலவு குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதில் குறிப்பாக பல நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன.
சேல்ஸ்போர்ஸ் பணி நீக்கம்
ஐடி துறையை சேர்ந்த சேல்ஸ்போர்ஸ் நிறுவனமும் தற்போது பணி நீக்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது முதல் கட்டமாக சுமார் 2500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மிகப்பெரிய ஐடி ஜாம்பவான்களே பணி நீக்க நடவடிக்கையில் எடுத்து வரும் நிலையில், இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பெர்பார்மன்ஸ் அடிப்படையில் நீக்கம்
சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் அதன் 2500-க்கு மேற்பட்ட ஊழியர்களை, அவர்களின் பெர்பார்மன்ஸ் அடிப்படையில் நீக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல நூறு பேர் 30 நாள் மதிப்பாய்வு செய்யப்படுவார்கள் என்றும், ஒரு மாதத்திற்கு பிறகு அவர்கள் விடுவிடுக்கப்படலாம் என்றும் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
ஆதரவு அளிப்போம்
இது குறித்து CNBC உறுதி செய்துள்ளதாகவும், எங்களின் விற்பனை செயல்திறன் என்பது எங்களுக்கு பொறுப்புணர்வை கூட்டியுள்ளது. இதனால் சிலர் வணிகத்தினை விட்டு வெளியேற வழிவகுத்துள்ளது. அவர்கள் வெளியேறினாலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
குறைவானவர்களே பாதிப்பு
எனினும் மற்றொரு அறிக்கையில் இந்த பணி நீக்கத்தில் 1000 குறைவான ஊழியர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தில் மொத்தம் 73,541 பேர் இருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டினை காட்டிலும் 36% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது அதிகப்படியான தேவை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய பணியமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பணியமர்த்தல் முடக்கம்
தகவல்கள் படி, சேல்ஸ்போர்ஸ் 90 ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், ஜனவரி 2023 வரையில் பணியமர்த்தலை முடக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
முதலீட்டாளர்களும் நிறுவனத்திடம் இருந்து அதிக லாபத்தினை எதிர்பார்க்கின்றன. இதனால் நிறுவனம் செலவு குறைப்பினை செய்யும் பட்சத்தில், அது வருவாய் அதிகரிக்க வழிவகுக்கும். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்படுகின்றது.
முதலீட்டாளர்கள் அழுத்தம்
சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் அதன் முக்கிய முதலீட்டாளரான ஸ்டார்போர்டின் அழுத்தத்தினை எதிர்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதோடு செல்ஸ்போர்ஸின் மிகசிறந்த போட்டியாளாகளில் ஒருவரான மைக்ரோசாப்ட் கடந்த அக்டோபர் மாதத்தில் பணி நீக்க நடவடிக்கையினை மேற்கோண்டது.
மறுசீரமைப்பு
தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் வருவாயும் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஐடி நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து அழுத்தத்தினை எதிர்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் தான் பணி நீக்கம் உள்ளிட்ட பல மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.