கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து இருந்தாலும், பொருளாதாரத்தின் நிலையை கருத்தில் கொண்டு, கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொழில் துறைகளுக்கு லாக்டவுனில் இருந்து சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் சில உற்பத்தி நிறுவனங்கள் குறைந்தபட்ச ஆட்களைக் கொண்டு உற்பத்தியினை மீண்டும் தொடங்கியுள்ளன.
கடந்த சில வாரங்களாக லாக்டவுன் காரணமாக முடங்கியுள்ள நிலையில், நிறுவனங்கள், உற்பத்தி துறை சார்ந்த ஆலைகள் என அனைத்தும் முற்றிலும் முடங்கியிருந்தன.
சாம்சங் உற்பத்தி தொடக்கம்
இதற்கிடையில் ஊரடங்கினால் இதுவரை முடங்கியிருந்த நொய்டாவில் உள்ள சாம்சங் மொபைல் தொழிற்சாலைகள் மீண்டு இயங்கத் தொடங்கியுள்ளது. அது மட்டுமல்ல சுமார் 3,000 ஊழியர்கள் பேருந்துகள் மூலமாக அழைத்து வரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் மொபைல் போன் உற்பத்தி பிரிவுகளில், சுமார் 60% மேற்பட்டவை உத்தரபிரதேசத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
மற்ற நிறுவனங்களும் ஆலோசனை
அதிலும் மிக பிரபலமான பிராண்டுகளான சாம்சங், விவோ, ஓப்போ, ரியல்மி மற்றும் லாவா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆலைகளை இங்கு கொண்டுள்ளன. சாம்சங் தற்போது தனது உற்பத்தியினை குறைந்த ஊழியர்களை கொண்டு தொடங்கியுள்ள நிலையில், தற்போது மற்ற நிறுவனங்களும் உற்பத்தியினை தொடங்க ஆலோசித்து வருகின்றன என லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன.
ஒப்போ மற்றும் விவோவும் தொடக்கம்
உற்பத்தி தொடங்கப்பட்டாலும் மூலப் பொருட்களை பெறுவதற்கான போக்குவரத்து வசதிகள் இன்னும் சிக்கலாகத் தான் உள்ளது. ஆக இந்த நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் மூலப் பொருட்களை வைத்து உற்பத்தியை செய்ய தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விவோ மற்றும் ஒப்போ நிறுவனங்களூம் மே 8 முதல் 30% உற்பத்தியை தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்
இதற்கிடையில் அதிகாரிகள் பிறபித்துள்ள உத்தரவுக்கு இணங்க ஒப்போவும் 30% உற்பத்தியினை சுமார் 3,000 ஊழியர்களை கொண்டு செயல்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிலையில், அவர்கள் சுழற்சி முறையில் பணி புரிவார்கள் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதே போல அனைத்து பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள, அனைத்து நிறுவனங்களிலும் சமூக இடைவெளியுடன், குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு சுழற்சி முறையில் பணிபுரிய வைத்தால் நன்றாகத் தான் இருக்கும்.