இந்தியா, பொருளாதார மந்த நிலையில் இருப்பதை ஜிடிபி தொடங்கி, மின்சார நுகர்வு குறைந்து இருப்பது வரை பல தரவுகளும் உறுதிப் படுத்தி கொண்டு தான் இருக்கின்றன.
இந்த மந்த நிலையை சரி செய்து, மீண்டும் இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்கு மத்தியில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் வேறு, வேலை நிறுத்தத்துக்கு எல்லாம் அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறது.
ஸ்ட்ரைக்
வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 2020 ஆகிய இரண்டு நாட்களுக்கு, United Forum of Bank Unions (UFBU)என்கிற பல வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு, வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. ஏன் இந்த வேலை நிறுத்தத்தை இப்போது செய்கிறார்கள். என்ன காரணம்..?
காரணங்கள்
1. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான சம்பளத்தை 20 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும்.
2. வாரத்துக்கு 5 வேலை நாட்கள் முறையை அமல்படுத்த வேண்டும்.
3. புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும்
4. ரிட்டயர்மெண்ட் சலுகைகளுக்கு வரிச் சலுகை... என பல கோரிக்கைகளை, இந்திய வங்கிகள் சங்கத்திடம் பேசினார்கள். ஆனால் எந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளாததால் தற்போது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
ஜனவரி 08
ஏற்கனவே, கடந்த ஜனவரி 08, 2020, புதன் கிழமை அன்று, மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தார்கள். ஆனால் இந்த முறை தங்கள் சொந்த கோரிக்கைகளுக்காகச் செய்ய இருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர்.
எஸ்பிஐ தரப்பு
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 2020 ஆகிய தேதிகளில், அதுவும் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் நடக்க இருக்கும் வேலை நிறுத்தத்தால், வங்கியின் செயல்பாடுகள் கொஞ்சம் பாதிப்படையலாம். இருப்பினும் எஸ்பிஐ தன் வங்கிச் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்ய எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ.
ரெடியா இருங்க
ஜனவரி 31 (வெள்ளிக் கிழமை), பிப்ரவரி 01 (சனிக் கிழமை) இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 02 ஞாயிற்றுக் கிழமை என்பதால் வங்கி சேவைகளில் ஒரு சுணக்கம் ஏற்படலாம். எனவே மக்களே இந்த தேதிகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு உங்கள் வங்கிச் வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
பங்கெடுக்க இருக்கும் சங்கங்கள்
All India Employees Association (AIBEA),
All India Bank Officers Confederation (AIBOC),
National Confederation of Bank Employees (NCBE),
All India Bank Officers' Association (AIBOA),
Bank Employees Federation of India (BEFI),
Indian National Bank Employees Federation (INBEF),
Indian National Bank Officers' Congress (INBOC),
National Organisation Of Bank Workers (NOBW)
National Organisation of Bank Officers (NOBO) போன்ற சங்கங்கள், இந்த இரண்டு வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்க இருக்கிறார்களாம்.