இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக வட்டி சலுகை முதல் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. பொதுவாகப் பண்டிகை காலத்தில் ஹோம் லோன் அல்லது கார் லோன்-க்கு மட்டுமே அதிகளவிலான சலுகையை வங்கிகள் அளிக்கும்.
ஆனால் தற்போது வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்த காரணத்தாலும், நிறுவனம் அல்லது கார்பரேட் கடன்களை வழங்குவதில் பாதுகாப்பற்ற தன்மை இருக்கும் காரணத்தால் எஸ்பிஐ உட்பட அனைத்து வங்கிகளும் ரீடைல் கடன் திட்டங்களில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இதன் வாயிலாக எஸ்பிஐ வங்கி தற்போது அனைத்து முக்கிய ரீடைல் கடன் திட்டங்களுக்கும் எப்போதும் இல்லாத வகையில் சலுகைகளை இந்தப் பண்டிகை காலத்தில் அறிவித்துள்ளது.
கொரோனா அலைகள்
முதல் கொரோனா அலைக்குப் பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையை மிக முக்கியப் பங்கு வகித்தது பண்டிகை காலம் தான் இதேபோலத் தான் தற்போதும். 2வது கொரோனா தொற்று அலையில் இருந்து சிறப்பான முறையில் இந்தியா மீண்டு வந்து கொண்டு இருக்கும் நிலையில் இந்தப் பண்டிகை காலத்தைத் தான் அனைத்துத் தரப்பு மக்களும் நிறுவனங்களும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.
பண்டிகை காலம்
இந்தப் பண்டிகை காலத்தில் மக்கள் கையில் போதுமான பண உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதக்காக அனைத்து முன்னணி வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகிறது. சமீபத்தில் ஹெச்டிஎப்சி வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக 6.7 சதவீதமாகக் குறைத்த நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி அனைத்து முக்கியக் கடன்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
கார் லோன் மற்றும் பர்சனல் லோன்
தற்போது எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கார் லோன்-ஐ ஒரு லட்சம் ரூபாய் கடனை வெறும் 1,539 ரூபாய்க்கு அளிக்கிறது. இதேபோல் பர்சனல் லோன்-ஐ ஒரு லட்சம் ரூபாய் கடனை 1,832 ரூபாய்க்கும் அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு வட்டி விகிதம் பண்டிகை காலத்திற்காகப் பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹோம் லோன்
இதேபோல் எஸ்பிஐ வங்கி மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய வர்த்தக இலக்குடன் ஹோம் லோன்-ஐ வெறும் 6.7 சதவீதத்திற்கு அளிக்கிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் எவ்வளவு ஹோம் லோன் வாங்கினாலும் 6.7 சதவீதம் வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு 75 லட்சத்திற்கு அதிகமான தொகைக்கு எஸ்பிஐ வங்கியில் 7.15 சதவீதம் வட்டி நடைமுறையில் இருந்தது.
45 அடிப்படை புள்ளிகள் குறைவு
தற்போது ஹோம் லோன்-க்கு சுமார் 45 அடிப்படை புள்ளிகள் குறைவாக அளிக்கப்படும் காரணத்தால் 75 லட்சம் ரூபாய் அளவிலான 30 வருட கடனுக்குச் சுமார் 8 லட்சம் ரூபாய் வரையில் சேமிக்க முடியும். இது மிகப்பெரிய சேமிப்பு. இதேபோல் மாத சம்பளம் இல்லாதோருக்கு 0.15 சதவீதம் அதிகமான வட்டியில் அதாவது 6.85 சதவீத வட்டியில் ஹோம் லோன் அளிக்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் நிர்ணயம் செய்வதில் சிபில் ஸ்கோர் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
தங்க நகை கடன்
மேலும் பண்டிகை காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முக்கியமான நிதி திரட்டும் ஆதாரமாக விளங்குவது தங்க நகை கடன் தான். மக்களின் நிலையை உணர்ந்த எஸ்பிஐ வங்கி தங்க நகை கடனை வெறும் 7.5 சதவீத வட்டியில் அளிக்கிறது. இதனால் பண்டிகை காலத்தில் அதிக வட்டியில் பர்சனல் லோன் வாங்க விருப்பம் இல்லாதவர்கள் தங்க நகைகளை வைத்து கடன் பெறலாம், வட்டி செலுத்துவதில் பல ஆயிரம் சேமிக்க முடியும்.
எஸ்பிஐ ஆன்லைன் சேவை
இவை அனைத்திற்கும் மேலாக எஸ்பிஐ வங்கியில் தற்போது அனைத்து கடன்களையும் ஆன்லைன் தளத்திலேயே விண்ணப்பிக்கும் சேவையைக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்க விருப்பப்படும் அனைவரும் https://sbiyono.sbi/index.html என்ற இணையத் தளத்தில் பதிவு செய்யலாம். இதேபோல் பல சேவைகள் யூனோ செயலியிலும் உள்ளது.