தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தற்போது தான் நல்ல காலம் பிறந்துள்ளது எனலாம். ஏனெனில் கடந்த சில வருடங்களாக பெரும் பின்னடைவை சந்தித்து வந்த நிறுவனங்கள், பலத்த போட்டி, ஏஜிஆர் வழக்கு என பலவற்றால் சீர்குலைந்து போயின.
போதாக்குறைக்கு ஜியோவின் வருக்கைக்கு பின்னர் சொல்லவே தேவையில்லை, அந்தளவுக்கு பலத்த பின்னடைவை சந்தித்தன.
அதிலும் ஜியோவின் போட்டியினை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில், சில நிறுவனங்கள் காணாமல் போனதும் உண்மையே. அந்தளவுக்கு அதிரடியான பல சலுகைகளை கொடுத்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது ஜியோ.
தடுமாறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
இதற்கிடையில் தான் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் பாக்கித் தொகையை, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்பளித்தது. ஆனால் ஏற்கனவே பெருத்த அடி வாங்கியிருந்த வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் இதனை செலுத்த தடுமாறி வந்தன.
எங்களுக்கு வேறு வழியில்லை
ஒரு கட்டத்தில் தங்களுக்கு வேறு வழியில்லை. அரசு நிவாரணம் வழங்காவிட்டால், கடைக்கு பெரிய பூட்டாக போடுவதை தவிர வேறு வழியில்லை என்றெல்லாம் கூறின. எனினும் தங்களால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு நிறுவனமும் கணிசமான தொகையினை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளன.
10 வருடம் கால அவகாசம்
இந்த நிலையில் இன்று மத்திய அரசுக்கு பாக்கித் தொகையை செலுத்த, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 10 வருடம் அவகாசம் கொடுத்து பரபர தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இது உண்மையில் துவண்டு போன நிறுவனங்களுக்கு, தங்களை தற்காத்துக் கொள்ள பயன்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே பலத்த கடன் பிரச்சனையில் இருந்து வரும் நிலையில், இது அந்த நிறுவனத்திற்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் விசாரணை
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருவாயில் குறிப்பிடத்தகுந்த தொகையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். ஆனால் ஜியோவின் வருகைக்கு பின்னர் பெருத்த நஷ்டத்தில் இருந்த நிறுவனங்கள் செலுத்த முடியாமல் தடுமாறி வந்தன. இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி அமித் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
10% தொகையினை 7 மாதத்திற்குள் செலுத்த வேண்டும்
அப்போது மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை 10 வருடத்திற்குள் செலுத்த வேண்டும். எனினும் நிலுவையில் 10 சதவீதம் தொகையை அடுத்த வருடம் மார்ச் 31க்குள் கட்ட வேண்டும் எனவும் தீர்பளித்துள்ளது. மேலும் இந்த 10 வருட அவகாசமானது ஏப்ரல் 1, 2021 முதல் தொடங்குகிறது. இது அடுத்த மார்ச் 31, 2031க்குள் ஏஜிஆர் நிலுவையை செலுத்தி விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசின் கோரிக்கை என்ன
மேலும் இந்த தவணையை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7ம் தேதி்க்குள் அதை கட்டி முடித்திட வேண்டும். அப்படி இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மத்திய அரசு முன்னதாக 20 ஆண்டுகள் அவகாசம் கேட்டிருந்த நிலையில், நீதிமன்றம் அதற்காக 10 வருடம் அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications