கடன்களுக்கான வட்டி தள்ளுபடி விவகாரத்தில், மத்திய அரசு & ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. அப்படி தள்ளுபடி செய்தால் அது இந்திய வங்கித் துறையை பாதிக்கும் என்றது.
அதோடு கடன்களுக்கான மாரடோரியத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் எனவும் சொல்லி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 02 அக்டோபர் 2020 அன்று, மத்திய அரசு, வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய தயார் என உச்ச நீதிமன்றத்திடம் பிரமாணப் பத்திரம் வழியாகத் தெரிவித்தது.
விளக்கம் திருப்திகரமாக இல்லை
இது 2 கோடி ரூபாய் வரைக்குமான கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். மார்ச் - ஆகஸ்ட் 2020 வரையான ஆறு மாதங்களுக்கு மட்டுமே வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. மத்திய அரசின் இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என, இன்று, உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அதோடு அடுத்த ஒரு வார காலத்தில் மீண்டும் இன்னொரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யச் சொல்லி இருக்கிறது.
உச்ச நீதிமன்றம்
வழக்கு தொடுத்து இருப்பவர்கள் எழுப்பி இருக்கும் பல கேள்விகளுக்கு, மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் சரியான விளக்கம் இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறது உச்ச நீதிமன்றம். அதோடு, ரியல் எஸ்டேட், மின்சார உற்பத்தி கம்பெனிகளின் சிரமங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
உத்தரவு அல்லது சுற்றறிக்கை இல்லை
அதே போல, இதுவரை மத்திய அரசின், வட்டிக்கு வட்டி தள்ளுபடி (Interest on interest Waiver) செய்யும் விஷயத்தை அமல்படுத்தும் விதத்தில் எந்த ஒரு சுற்றறிக்கையோ அல்லது ஆணைகளையோ, மத்திய அரசோ அல்லது மத்திய ரிசர்வ் வங்கியோ பிறப்பிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
காமத் பேனல்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பெரிய கடன்களை மறுசீரமைப்பது குறித்து ஆலோசனைகளை வழங்க, முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் கே வி காமத் தலைமையில், ஒரு நிபுணர் குழுவை அமைத்தது மத்திய ரிசர்வ் வங்கி. காமத் குழு, 26 துறைகளுக்கு கொரோனா நெருக்கடிக்காக உதவுவது குறித்து பரிந்துரைத்து இருக்கிறது. காமத் குழுவின் பரிந்துரைகளை, ஆர்பிஐ ஏறத்தாழ ஏற்றுக் கொண்டது.
அறிக்கையை வெளியிடுங்கள்
மத்திய அரசு காமத் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கிறதா எனக் கேள்வி எழுப்பி இருக்கிறது உச்ச நீதிமன்றம். மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், காமத் குழுவின் அறிக்கை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசு காமத் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது என்றால், அந்த அறிக்கையை பொது வெளிக்குக் கொண்டு வாருங்கள் எனச் சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
அரசு தரப்பு
காமத் குழுவின் அறிக்கையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை எனச் சொன்னது அரசு தரப்பு. "அறிக்கையை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அந்த அறிக்கையை செயல்படுத்துவதில் தான் சிக்கல். மத்திய அரசும், ஆர்பிஐ வங்கியும், சில உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். அப்போது தான் என்ன நன்மைகள் இருக்கிறது என மக்களுக்குத் தெரிய வரும்" எனச் சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.