இந்திய வங்கிகளில் கடன் மோசடி என்பது அவ்வப்போது அரங்கேறி வரும் ஒரு சம்பவமாகத் தான் இருக்கிறது. இந்திய வங்கிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும், பிரச்சனை என்பது தொடர் கதையாகத் தான் இருந்து வருகின்றது.
அப்படி வங்கிகளில் மோசடி செய்து கடன் வாங்கி விட்டு, நாட்டை விட்டே வெளியேறியர்களில் மொகுல் சோக்சியும் ஒருவர்.
இவர் ஊழல் புகழ் என்று கூறப்படும் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியின் உறவினர் ஆவார்.
மோசடி மன்னர்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடியும் அவரது உறவினர் மொகுல் சோக்சியும் சுமார் 14,000 கோடி ரூபாய் என்ற அளவுக்கு கடன் வாங்கிவிட்டு 2018ம் ஆண்டில் வெளி நாடு தப்பி சென்றனர். இதில் மொகுல் சோக்சி ஆண்டிகுபா தீவுக்கும், நிரவ் மோடி லண்டனும் தப்பினர்,. எனினும் நிரவ் மோடி 2019ல் கைது செய்யபப்ட்டார். மொகுல் சோக்சியும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
10 ஆண்டுகள் தடை
இந்த நிலையில் கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் பங்குகளில் மோசடியில் ஈடுபட்டதற்காக, வெளி நாட்டுக்கு தப்பியோடி, பின்னர் கைது செய்யப்பட்ட மொகுல் சோக்சிக்கு 10 ஆண்டுகள் பங்கு சந்தையில் வணிகம் செய்ய தடை விதித்துள்ளது செபி.
ரூ.5 கோடி அபராதம்
மேலும் அவருக்கு 5 கோடி ரூபாய் அபாரதத்தினையும் விதித்துள்ளது. விதிக்கப்பட்டுள்ள இந்த 5 கோடி ரூபாய் அபராதத்தினை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் இந்திய பங்கு சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) உத்தரவிட்டுள்ளது.
கீதாஞ்சலிக்கும் சோக்சிக்கும் என்ன உறவு?
கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும் இருந்த மொகுல் சோக்சி, நிரவ் மோடியின் தாய் மாமா ஆவார். இவர்கள் இருவரும் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து கடன் வாங்கியுள்ள குற்றச்சாட்டினை ஏற்கனவே எதிர்கொண்டுள்ளனர். ஏற்கனவே இந்த கடனை வசூலிக்கும் பொருட்டு இவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தீவிர விசாரணை
கீதாஞ்சலி ஜெம்ஸ் பங்கினில் முறைகேடான வர்த்தகம் செய்ததாக கூறி, விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த மே மாதமே சோக்சிக்கு ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் பிறகு தான் தற்போதைய நடவடிக்கைகள் வந்துள்ளன.
கடந்த ஜூலை 2011 முதல் ஜனவரி 2012 வரையிலான காலக்கட்டத்தில் கீதாஞ்சலி பங்கினில் நடந்த வர்த்தக நடவடிக்கை குறித்து விசாரனை நடந்து வருகிறது.
இன்சைடர் டிரேடிங் சர்ச்சை வேற
முன்னதாக கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் இன்சைடர் டிரேடிங் செய்ததாக கூறி, ஒரு வருடத்திற்கு செபி செக்யூரிட்டி சந்தைகளில் இருந்து தடை விதித்திருந்தது. அதோடு அவருக்கும் 1.5 கோடி ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது சோக்சி நேரடியாக பத்திரங்களை வாங்கவோ அல்லது மறைமுகமா வாங்கவோ அல்லது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகின்றது. மொத்தத்தில் பத்திர சந்தையில் சோக்சியால் 10 ஆண்டுகளுக்கு வணிகம் செய்ய இயலாது.
பங்கின் தற்போதைய நிலவரம் என்ன?
இந்த பங்கு விலையானது தற்போது பங்கு சந்தைகளில் வணிகமாகவில்லை. இந்த நிறுவன பங்கின் விலையானது மொகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து கடன் வாங்கியதாக மோசடியில் சிக்கியதை, பெரும் சரிவினைக் கண்டன. கடைசியாக கடந்த ஏப்ரல் 2019ல் வர்த்தகமாகியது குறிப்பிடத்தக்கது.