பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு இந்த குரு பெயர்ச்சி அத்தனை சிறப்பாக இல்லை போல, தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
சில வாரங்களுக்கு முன்பு தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (சி இ ஓ) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் முறைகேடு செய்ததாக முதல் புகார் எழுந்தது.
இப்போது சலீல் பரேக் மீது மட்டும் இரண்டாவது புது புகார் எழுந்து இருக்கிறது. இப்போது வரை இந்த இரண்டாவது புகாரைப் பற்றி வாய் திறக்கவில்லை. என்ன புகார்..? யார் கொடுத்தார்கள்..? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
இரண்டாவது புகார் சாராம்சம்
சலீல் பரேக் கடந்த ஜனவரி 2018-ல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி இ ஓ-வாக் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி இ ஓ பெங்களூர் அலுவலகத்தில் இருந்து தான் செயல்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அதை மீறி சலீல் பரேக் மும்பையில் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கிறார்.
ஏன் பெங்களூரு வரமாட்டாரா
இதைத் தான் இரண்டாவது புகாரில் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். சலீல் பரேக்கை, பெங்களூருக்கு அழைத்து வருவதில் இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்க்கு என்ன சிக்கல் என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதோடு சலீல் பரேக் மாதம் இரண்டு முறையாவது பெங்களூரு வந்து போவதையும் குறிப்பிட்டு இருக்கிறது அந்த இரண்டாவது புகார்.
பணம் கொடுப்பது ஏன்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருமே அலுவலகத்துக்கு வந்து போகும் செலவை ஊழியர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது சலீல் பரேக் மும்பையில் இருந்து பெங்களூரு வந்து போகும் செலவுகளை மட்டும் நிறுவனம் கொடுப்பது ஏன்..? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதோடு இதுவரை சலீல் பரேக் பயணத்துக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனம் கொடுத்த பணத்தை திருப்பி வசூலிக்கவும் சொல்லி இருக்கிறது அந்த இரண்டாவது புகார் கடிதம்.
எழுதியவர் யார்
இந்த இரண்டாவது புகார் கடிதம், கையெழுத்து இடப் படாமலும், தேதி குறிப்பிடாமலும் இருக்கிறது. இதை எழுதியது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதித் துறையில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தான் எனவும் அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதாம். அதோடு, தன் விவரங்களை வெளியிட்டால், தன் மீது கடுமையான பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பயந்து பெயரைக் குறிப்பிடவில்லை எனவும் சொல்லப்பட்டு இருக்கிறதாம்.
இயக்குநர் குழு
இந்த இரண்டாவது புகாரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கே வந்து இருக்கிறது. இதற்கு முன்பே கடந்த செப்டம்பர் மாதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி இ ஓ மற்றும் முதன்மை நிதி அதிகாரிகள் சுமார் 350 கோடி ரூபாய் பணப் பரிமாற்றத்தில், கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் அந்த முதல் புகாரையும் கொஞ்சம் என்ன என்று பார்த்து விடுவோம்.
குற்றச்சாட்டு
முதல் புகார் கடிதத்தில், சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் இணைந்து பல காலாண்டுகளாக முறையற்ற, மோசமான நடவடிக்கைகளைச் செய்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இரண்டு உயர் அதிகாரிகளும் மோசடி செய்ததற்கான இ மெயில் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் தங்களிடம் இருப்பதாக புகாரில் சொல்லி இருந்தார்கள். கடந்த செப்டம்பர் 20, 2019 அன்று தான் இந்த தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு, முதல் புகார் கடிதம் வந்தது. சமீபத்தில் தான் IANS செய்தி நிறுவனத்துக்கு இந்த கடிதம் கிடைத்தது.
என்ன மோசடி
ஒரு நிறுவனத்துக்கு எப்படி லாபம் வரும். மொத்த வருவாய் - மொத்த செலவுகள் = நிகர லாபம். உதாரணமாக மொத்த வருவாய் ரூ.100 - மொத்த செலவுகள் ரூ.85 = நிகர லாபம் ரூ.15.
இப்போது இந்த நிகர லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் வருவாயை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவைக் குறைக்க வேண்டும். இன்ஃபோசிஸ் இரண்டையும் முறைகேடாக செய்து இருப்பதாகச் சொன்னது முதல் புகார்.
மோசடி விளக்கம்
கடந்த காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விசா கட்டணச் செலவுகள் போன்ற பல செலவுகளை, முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மேலிடம் அழுத்தம் கொடுத்தார்களாம். உதாரணமாக விசா கட்டணத்துக்கு 10,000 ரூபாய் செலவு செய்து இருந்தால், 5,000 அல்லது 6,000 ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வது. இப்படி செலவுகளைக் குறைத்தால் லாபம் கூடத் தானே செய்யும். அதைத் தான் இன்ஃபோசிஸ் நிறுவனமும் செய்து இருக்கிறது என முதல் புகார் கடிதம் விளக்கியது. இதெல்லாம் ஜு ஜு பி என்கிற ரேஞ்சில் ஒரு மெகா மோசடியைச் செய்து இருப்பதாகச் சொன்னது அந்த முதல் புகார் கடிதம். அது தான் 350 கோடி மோசடி.
350 கோடி முறைகேடு
முதல் புகார் கடிதம் விளக்கும் படிப் பார்த்தால், இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சில ஒப்பந்தம் மூலமாக 50 மில்லியன் டாலர் (சுமார் 350 கோடி ரூபாய்) பணம் வந்திருக்கிறது. வந்த போது அதை ஒழுங்காக கணக்கில் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் சில பல காரணங்களுக்காக வந்த 50 மில்லியன் டாலரை மீண்டும் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஆக இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு வந்த 50 மில்லியன் டாலர் கையில் இல்லை. இந்த இடத்தில் தான், 50 மில்லியனை திருப்பிக் கொடுத்ததை கணக்கில் கொண்டு வர வேண்டாம் என மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக புகார் சொல்லி இருந்தார்கள்.
சுருக்கம்
ஆக 1. விசா கட்டணம் போன்ற பல செலவுகளை முறையாக கணக்கில் கொண்டு வரவில்லை எனவே இன்ஃபோசிஸ் சொல்லும் கணக்குப் படி செலவு குறைந்து இருக்கிறது.
2. வராத 50 மில்லியன் டாலர் (350 கோடி ரூபாய்) வருமானத்தை வந்ததாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். ஆக இன்ஃபோசிஸ் கணக்குப் படி வருமானம் அதிகரித்து இருக்கிறது.
ஆடிட்டர்கள் என்ன செய்தார்கள்
மேலே சொன்ன 50 மில்லியன் டாலர் விவகாரம் போல, பல முக்கிய விவரங்களை ஆடிட்டர்களுக்கோ அல்லது இயக்குநர் குழுவுக்கோ கூட தெரியாத அளவுக்கு பார்த்துக் கொண்டார்களாம். எனவே ஆடிட்டர்களும் தங்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொடுத்துவிட்டார்களாம். குறிப்பாக பெரிய ஒப்பந்தங்களில் இருந்து வரும் வருமானங்களில், பல முறைகேடுகள் செய்து இருப்பதாகவும் முதல் புகார் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள் அந்த ஊழியர்கள். இதை எல்லாம் விட தனி மனித புகார்.
சலீல் பரேக்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் சலீல் பரேக், பல பரிசீலனை மற்றும் அனுமதிகளை முறையாக மேற்கொள்ளவில்லையாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவுக்கும், சில பல டீல்களுக்கான அப்ரூவல்களை இ மெயிலில் பதிவு செய்ய வேண்டாம் எனவும் சொல்லி இருக்கிறார்களாம். இவை எல்லாவற்றையும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்துக் காட்டும் எண்ணத்துடன் செய்திருப்பதாகவே புகார் சொல்லி இருந்தார்கள்.
நிலஞ்சன் ராய்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி (CFO) என்கிற முறையில், நிறுவனத்தில் நடக்கும் தவறுகளை முறையாகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் நிலஞ்சன் ராய் அதை சி இ ஓ வழியில் மறைத்துவிட்டார் எனவும் குற்றம்சாட்டி இருந்தார்ர்கள். அதோடு முதன்மைச் செயல் அதிகாரி, இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவில் இருக்கும் மற்றவர்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசியதையும் தங்கள் முதல் புகாரில் சொல்லி இருந்தார்கள்.
முதல் புகாருக்கு ஆதாரம் இல்லை
பெயர் சொல்ல விரும்பாத நபர்கள் கொடுத்த (முதல்) புகாரைப் பொறுத்த வரை, எந்தவொரு குற்றச்சாட்டையும் உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தணிக்கைக் குழு, இந்த புகாரை விசாரிக்க நியமித்த சட்ட நிறுவனமான ஷார்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் அண்ட் கோவின் விசாரணையைத் தொடரச் சொல்லி இருப்பதாக புகாருக்கு பதில் கொடுத்தார்கள் இன்ஃபோசிஸ் தரப்பினர்கள். அவ்வளவு தான் முதல் புகார் போன இடம் தெரியவில்லை.
பார்ப்போம்
இந்த முதல் புகாரில் கிளம்பிய சர்ச்சைகள், முழுமையாக சரியாவதற்கு உள்ளேயே இப்போது, இரண்டாவது புகார் எழுந்து இருக்கிறது. அதுவும் தனி மனித புகார். இப்போது இன்ஃபோசிஸ் தரப்பு இந்த இரண்டாவது புகாருக்கு என்ன செய்ய இருக்கிறது, எப்படி பதில் கொடுக்க இருக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம்.