பணக்காரர்கள் ஆக வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் அதை நோக்கி எத்தனை பேர் உழைக்கிறோம். எத்தனை பேருக்கு, அவர்களின் உழைப்புக்கு ஏற்றாற் போல உயர்வு கிடைக்கிறது என்று பார்த்தால் லட்சம் பேரில் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் முன்னுக்கு வருகிறார்கள்.
அப்படி தங்கள் சொந்த உழைப்பில், 40 வயதுக்குள் பணக்காரர்களாக வளர்ந்தவர்களைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
IIFL Wealth Hurun India 40 & Under Self-Made Rich List 2020 அறிக்கையின் படி, சிரோதா (Zerodha) தரகு நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின் காமத் (40) மற்றும் நிகில் காமத் (34) ஆகியோர் 40 வயதிற்குட்பட்ட, சொந்த உழைப்பில் பணக்காரர்களாக (Self made rich) வளர்ந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறார்கள்.
58 சதவிகிதம் அதிகம்
இந்த இரண்டு சகோதரர்களின் சொத்து மதிப்பு, 58 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். எனவே இவர்களின் சொத்து மதிப்பு ரூ. 24,000 கோடியாக உயர்ந்துள்ளது என்கிறது ஐஐஎஃப்எல் வெல்த் ஹுரன் இந்தியா. 40 வயதான நிதின் காமத் மற்றும் 34 வயதான நிகில் காமத் ஆகியோர் ஆன்லைன் வர்த்தக தளமான சிரோதாவை (Zerodha), இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட தரகு நிறுவனமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
இரண்டாவது இடம்
இந்த காமத் சகோதரர்களைத் தொடர்ந்து, மீடியா.நெட் நிறுவனத்தின் நிறுவனரான 38 வயது திவ்யாங்க் துராக்கியா (Divyank Turakhia), சொந்தமாக உழைத்து பணக்காரர்களாக உருவானவர்கள் பட்டியலில் 14,000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 8 % தான் அதிகரித்து இருக்கிறதாம்.
உதான் - மூன்றாவது இடம்
இந்த பட்டியலில், மூன்றாவது இடத்தை, உதான் (Udaan) ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர்களான அமோத் மால்வியா (39 வயது), வைபவ் குப்தா (40) மற்றும் சுஜீத் குமார் (40) ஆகியோர் பகிர்ந்து கொள்கிறார்கள். உதான் ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் சொத்து மதிப்பு 274 சதவீதம் அதிகரித்து இருக்கிறதாம்.
20,000 - 52,500 கோடி ரூபாய்
உதான் ஸ்டார்ட் அப் கம்பெனியின் மதிப்பீடு கடந்த அக்டோபர் 2019-ல் 20,000 கோடியாக இருந்தது. இந்த பிப்ரவரி 2020-ல், உதான் கம்பெனியின் மதிப்பீடு 52,500 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறாதாம். கடந்த ஆண்டும் உதான் கம்பெனி நிறுவனர்களின் சொத்து மதிப்பு பயங்கரமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
பைஜு கம்பெனியின் ரிஜ்ஜூ ரவீந்திரன்
39 வயது வாத்தியார் கேரள சேட்டன் ரிஜ்ஜூ ரவீந்திரனின் சொத்து மதிப்பு 117 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 7,800 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். இவரைத் தொடர்ந்து ஃப்ளிப்கார்டின் முன்னாள் தலைவர்களான பின்னி பன்சால் (37 வயது) & சச்சின் பன்சால் (39) வருகிறார்கள்.