பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல போராட்டங்களுக்குப் பின்பு ஏர் இந்தியாவைக் கைகழுவியுள்ளது. இன்று DIPAM மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டேலேஸ் (Talace Pvt Ltd) சுமார் 18,000 கோடி ரூபாய் தொகைக்கு ஏர் இந்தியாவைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங் தலைமையிலான கூட்டணி 15,100 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கோரிய நிலையில், ஏர் இந்தியா கைப்பற்றும் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
ஏர் இந்தியா விற்பனை மூலம் மத்திய அரசுக்கு லாபமா..? நஷ்டமா..?
ஏர் இந்தியா விற்பனை
இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 15 வருடங்களாகத் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வரும் நிலையில், கடனையும், நிறுவனத்தையும் மத்திய அரசால் சமாளிக்க முடியாத நிலையில் ஏர் இந்தியாவை இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கடந்த வாரம் ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் குழுமம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் DIPAM அமைப்பு இத்தகவலை மறுத்தது. இந்நிலையில் இன்று DIPAM மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
டேலேஸ் பிரைவேட் லிமிடெட்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டேலேஸ் (Talace Pvt Ltd) சுமார் 18,000 கோடி ரூபாய் தொகைக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் அரசுக்குச் சொந்தமாக இருக்கும் 100 சதவீத பங்குகளையும் AIXL மற்றும் AISATS நிறுவனத்தில் ஏர் இந்தியா வைத்திருக்கும் பங்குகளையும், இவ்விரு அமைப்பின் நிர்வாக அதிகாரத்தையும் பெற உள்ளது.
நிலம் மற்றும் கட்டிடங்கள்
இதேபோல் ஏர் இந்தியா விற்பனை மூலம் இந்நிறுவனத்திற்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்கள் வெற்றி பெறுவோருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாடா-வுக்கு இது கிடைக்கவில்லை.
டாடாவுக்கு ஏமாற்றம், அரசுக்கு லாபம்
தற்போது மத்திய அரசு மற்றும் டாடா சன்ஸ் டேலேஸ் நிறுவனத்திற்கு மத்தியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் Non core சொத்துகளாக இருக்கும் நிலம், கட்டிடம் ஆகியவை அரசின் புதிய நிறுவனமான Air India Assets Holding Ltd (AIAHL) ஏற்க உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 14,718 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் அரசுக்குச் செல்கிறது.
46,262 கோடி ரூபாய் கடன்
இதேபோல் ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடனில் தற்போது டாடா கொடுக்கும் 18,000 கோடி தொகையைக் கழித்த பின்பு, இந்திய அரசு சுமார் 46,262 கோடி ரூபாய் கடனை AIAHL நிறுவனம் ஏற்கிறது.
AIAHL அமைப்பு
இதேபோல் AIAHL அமைப்பு ஏர் இந்தியா பங்கு விற்பனை மூலம் மூலம் சுமார் 2,700 கோடி ரூபாய் அளவிலான தொகையும் டாடா மூலம் கிடைக்க உள்ளது. AIAHL 100 சதவீதம் அரசு நிறுவனமாகும்.
44,679 கோடி ரூபாய் மொத்த பாதிப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது மூலம், தற்போது அரசுக்கு மொத்த பாதிப்பு என்று பார்த்தா 44,679 கோடி ரூபாய் இவை அனைத்தும் தற்போது AIAHL நிறுவனத்தின் பெயரில் வைக்கப்பட்டு உள்ளது.
ஒரு நாளுக்கு ரூ.20 கோடி நஷ்டம்
அனைத்திற்கும் மேலாக ஏர் இந்தியா நிறுவனத்தை ஒரு நாள் இயக்க வேண்டும் என்றால் அரசுக்கு சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதுதான் பெரிய சுமை, தற்போது ஏர் இந்தியா விற்பனை மூலம் இந்தச் சுமை அரசுக்கு இருக்காது.
கூடுதல் சுமை இல்லை
எப்படிப் பார்த்தாலும் அரசுக்கு ஏர் இந்தியா விற்பனை மூலம் 44,679 கோடி ரூபாய் நஷ்டம் என்றாலும், இனி வரும் காலத்தில் கூடுதல் சுமை இருக்காது என்பது தான் அரசுக்கு மகிழ்ச்சியான விஷயம். இல்லையெனில் மாதம் 600 கோடி ரூபாய், வருடத்திற்கு 7,200 கோடி ரூபாய் நஷ்டம்.
லாபமா.? நஷ்டமா..?
இப்போ சொல்லுங்க அரசுக்கு இது லாபமா..? நஷ்டமா..? மேலும் இந்த 44,679 கோடி ரூபாய் சுமைக்கு வங்கி உத்தரவாதம் உள்ளதால் அரசுக்கும், மக்களுக்கும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.