இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியினை செய்யவுள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தைவானின் மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கானுடன் இணைந்து குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை மற்றும் மின்னணு சாதனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பினையும் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பல பொருட்களின் விலை குறையும்
இதற்காக 1.54 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் முதல்வர் பூபேந்திர படேல் உடன் போடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மேட் இன் இந்தியா மூலம் தயாரிக்கப்படும் செமிகண்டக்டர்கள், இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலையில் எதிரொலிக்கும் என அனில் அகர்வால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பொருட்கள் விலை குறையும்
இன்று ஒரு லேப்டாப்பின் விலை 1 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். இது இந்தியாவிலேயே செமி கண்டக்டர் கிடைத்தவுடன் அதன் விலை 40,000 ரூபாய் அல்லது அதற்கு கீழாக குறையும் என தெரிவித்துள்ளார்.
தற்போது தைவான் மற்றும் கொரியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் செமி கண்டக்டர்கள், விரைவில் இந்தியாவிலும் தயாரிக்கப்படும். இது நாட்டின் தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இது தான் இலக்கு
இது மொபைல் போன்கள், மடிக் கணினிகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் என பல தயாரிப்புகளையும் இலக்காக கொண்டு இது தயாரிக்கப்பட்டது.
நீண்டகாலமாக பாக்ஸ்கான் உடன் பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது பாக்ஸ்கான், வேதாந்தா கூட்டணி இறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தான் இத்தகைய அறிவிப்பும் வந்துள்ளது.
முதலீடு பற்றி கவலையில்லை
நிதி முதலீடு குறித்து கூறிய அனில் அகர்வால், பாக்ஸ்கான் 38% பங்கினை இந்த கூட்டணியில் வைத்திருக்கும். ஆக தேவையான முதலீடு கிடைத்து விடும். ஆக நிதி பற்றிய கவலை இல்லை என்றும் அனில் அகர்வால் தனது உரையில் கூறினார்.